கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை மலை மீது பக்தர்கள் ஏறிச்செல்ல கலெக்டர் தடை!
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மலை ஏறுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மலை ஏறுவதற்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தடை விதித்துள்ளார்.
கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவன் மற்றும் முருகன் ஆலயங்களில் தீபங்கள் ஏற்றப்படும். அத்துடன் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிப்படுவது வழக்கம்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியாக சிவன் திருவண்ணாமலையில் வீற்றிருப்பதாக ஐதீகம். அன்றைய தினம் திருவண்ணாமலையில் மலை மீது ராட்சத கொப்பரையில் டன் கணக்கில் நெய் ஊற்றி ஏராளமான வேட்டிகளை திரியாக இணைத்து தீபம் ஏற்படும்.
இந்த தீபமானது காற்று, மழை வந்தாலும் அணையாமல் அப்படியே இருப்பது சிவனின் அருளால் ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த தீபத் திருநாளை காண
பக்தர்கள் அதிகாலை முதற்கொண்டே மலையேறி காத்துக் கொண்டிருப்பர். இதையடுத்து மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும்.
இந்நிலையில் மலையேறும் பக்தர்களுக்கு போதிய பாதிகாப்பு அளிக்க முடியாத சூழல் இருப்பதால் மலையேறி சென்று தீபத்தை பார்க்க மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தடை விதித்துள்ளார்.
மேலும் கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு பொதுமக்கள் அன்னதானம் வழங்கவும் ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.