சென்னை: கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த போலி போலீஸ்
சென்னை: சென்னை அருகே நீலாங்கரையில் காதலருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் போலீஸ் எனக்கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலையூரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி (வயது 18) நேற்று மாலை 5 மணி அளவில் நீலாங்கரை அருகே உள்ள அக்கரை சோதனை சாவடியை ஒட்டி உள்ள கடற்கரையில் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அவர்களிடம் சென்று நீங்கள் யார்? இங்கே ஏன் தனிமையில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். இந்த இடம் பாதுகாப்பானது இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அந்த வாலிபர், நான் சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து வருகிறேன். சப்-இன்ஸ்பெக்டரிடம் உங்களை பற்றிய தகவல்களை கூறிவிட்டு செல்லுங்கள் என்று கூறி தனது மோட்டார் சைக்கிளில் ராதிகாவை ஏறிச் சென்று கொண்டு அருகில் இருந்த தங்கும் விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போதுதான் அந்த மாணவிக்கு, ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று பொறி தட்டவே அந்த வாலிபரிடமிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அந்த வாலிபர், இளம்பெண்ணை மிரட்டி விடுதிக்குள் உள்ள ஒரு அறையில் அடைத்துள்ளார்.
அதன் பின், அந்த பெண்ணின் கை, கால்களை கட்டிப் போட்டு அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டிய மர்ம நபர், விடுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து சாலையோரமாக இளம்பெண்ணை இறக்கி விட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி நேற்று இரவு நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து அடையாளம் தெரியாத வாலிபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீலாங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அருகே போலீஸ் என கூறி கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.