இலங்கையில் நடப்பதாக இருந்த இசை நிகழ்ச்சி ரத்து - வைகோ தகவல்
சென்னை: கொழும்பில் இன்றும் நாளையும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இன்றும் நாளையும் விஜய் டிவியின் புகழ்பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற திவாகர், சோனியா, சையத் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் பங்கேற்கப் போவதாகவும், அவர்களுக்கு பெரும் தொகை தரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த விவரங்கள் வெளியில் தெரிய வந்ததும், தமிழர் அமைப்புகள் கடும் கண்டனங்களை வெளியிட்டன, குறிப்பாக மதிமுக பொதுச் செயலர் வைகோ, இந்த நிகழ்ச்சியை ரத்து செய்தே தீர வேண்டும் என எச்சரித்தார்.
ரோமாபுரி பற்றி எரிந்த போது நீரோ பிடில் வாசித்தது போல தனியார் தொலைக்காட்சி இசைக் கலைஞர்கள் அங்கு பாடப் போகிறார்களா? ஈழத் தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம் இன்னும் அங்கு காற்றில் கலந்து தான் இருக்கிறது. காயப்பட்டுப் போன தமிழர்கள் மனங்களில் நெருப்பைப் போடும் வேலையில் ஈடுபட வேண்டாம் என விஜய் தொலைக்காட்சியை எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து தமக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விஜய் டிவி அறிவித்தது.
இப்போது இந்த இசை நிகழ்ச்சியே ரத்தாகிவிட்டதாக இலங்கை நாளிதழ்கள் அறிவித்துள்ளன.
இந்த தகவலை மதிமுக பொதுச் செயலர் வைகோ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சூப்பர் சிங்கர்கள்?
அதே நேரம், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க திவாகர், சோனியா உள்ளிட்ட 5 கலைஞர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.