கமிஷனர் ஜார்ஜ் விரைவில் மாற்றம்… திமுக புகாருக்கு தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை
சென்னை கமிஷனர் ஜார்ஜ் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் விரைவில் மாற்றப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடப்பதையொட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்ற வேண்டும் என்று திமுக சார்பில் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம்ஜைதிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அனுப்பியுள்ள புகார் மனுவில், ஆர்.கே. நகர் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தொகுதியில் தேர்தல் நடைமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் ஜார்ஜ் அதிமுகவிற்கு ஆதரவாக, ஒருதலை பட்சமாக செயல்படக் கூடியவர். அதிமுக ஆட்சியில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை தொடர்ந்து போலீஸ் கமிஷனராக இருந்துள்ளார். இடையில் சிறை துறைக்கு மாற்றப்பட்ட அவர் 2016-ம் ஆண்டு முதல் தொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கிறார். இவரது பொறுப்பு காலத்தில் சென்னையில் பல்வேறு சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதி பதட்டமான தொகுதி எனபதை நீங்கள் அறிவீர்கள். எனவே, தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை இட மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவின் நகல்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் கமிஷனர் ஜார்ஜ் விரைவில் மாற்றப்படுவார் என்ற தகவல் போலீஸ் வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளன.
சென்னையில் ஜல்லிகட்டு தடைக்கு எதிராக மாணவர்கள் நடத்திய அறப்போராட்டம் முடிவில் பெரும் வன்முறை வெடித்தது. அப்போது, சாதாரண பொதுமக்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டார்தான் இந்த ஜார்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications