போர்க்குற்றங்களுக்கு பொறுப்பேற்க இலங்கையை வற்புறுத்துங்கள்: மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு
நியூயார்க்: காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் உலக நாடுகள், இறுதிகட்ட போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வலியுறுத்த வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை முதல் மூன்று நாட்களுக்கு இலங்கையின் கொழும்பு நகரில் காமன்வெல்த் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி உலக நாடுகள் பல கலந்து கொள்ள இருக்கின்றன. இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகள் இலங்கைத் தனது போர்க்குற்றத்தை ஏற்றுக் கொள்ள வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின், ஆசிய பிராந்தியத்திற்கான தலைவர் பிராட் ஆட்ம்ஸ்.
மேலும், இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ‘ சர்வதேச உச்சிமாநாட்டில், காமன்வெல்த் உறுப்பு நாடுகள் இலங்கை மீதான போர்குற்றங்கள் பற்றி பதிவு செய்யாவிட்டால், அது காமன்வெல்த் அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக ஆக்கி விடும்.
2009-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையரின் நிலைப்பாட்டிற்கு காமன்வெல்த் உறுப்பு நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்' எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.