திராவிடக் கட்சிகளை அழிக்க நினைக்கும் மதவாத சக்திகள் முயற்சி தோல்வியடையும்: மு.க.ஸ்டாலின்
திராவிடக் கட்சிகளை அழிக்க மதவாத சக்திகள் முயற்சித்து வருவதாகவும், அவர்களது முயற்சி தோற்று போகும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: திமுகவை அழிப்பதற்கு மதவாத சக்திகள் முயற்சித்து வருகின்றன. அவர்களின் முயற்சி நிச்சயம் தோற்றுபோகும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமையன்று திராவிட முன்னேற்றக் கழக வரலாறு என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நீங்கள்தான் அழிவீர்கள்...
திமுக அழிப்பதற்கும், ஒழித்துக் கட்டுவதற்கும் பலர் முயற்சித்து வருகிறார்கள். ஆனால் இந்த மாபெரும் இயக்கத்தை அழிக்க நினைத்தால் நீங்கள்தான் அழிந்து போவீர்கள். எனவே திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது.
பலிக்காது
மதவாதச் சக்திகளும் திமுகவை அழிக்க தங்களால் இயன்ற முயற்சிகளை செய்து வருகின்றனர். அவை எதுவும் பலிக்காது.
கொம்பனாலும் முடியாது
இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. இங்கு வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு மட்டுமல்ல, தமிழனின் வரலாறும் அமைந்துள்ளது.
சுயமரியாதையின் வெற்றி
இந்த நூலானது சுய மரியாதையின் வெற்றியாகும். காட்டில் வலிமையான மரத்தை வைரம் பாய்ந்த கட்டை என்போம். அதுபோல வயது முதிர்ந்தாலும் கருணாநிதியும் , க.அன்பழகனும் இன்னும் இந்த இயக்கத்துக்காக உழைத்து கொண்டிருப்பதால் அவர்களும் வைரம் பாய்ந்த இரு மாமனிதர்கள் என்றே சொல்லலாம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.