சமூக ஆர்வலர் பியூஸ் கைதுக்கு ஜி.ஆர், முத்தரசன், கனிமொழி கண்டனம்
சென்னை: சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு சிபிஎம், சிபிஐ கட்சிகளின் மாநிலச் செயலர்களும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கனிமொழி தனது முகநூலில் பதிவு செய்துள்ளதாவது:
சேலத்தைச் சேர்ந்த சுற்றுச் சூழல் போராளியும், கால நிலை மாற்ற ஆர்வலருமான பியுஷ் மனுஷ் சில நாட்களுக்கு முன் தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு ரயில்வே மேம்பாலம் கட்டுவதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதாகக் கூறிக் கொண்டு... தனக்கு எதிரான அல்லது விமர்சனக் குரல்களை அடக்குவதற்காக சர்வாதிகாரத்தைக் கட்டவிழ்த்துவிடும் அரசின் நடவடிக்கைதான் இது. சேலம் மற்றும் சேலத்தைச் சுற்றியுள்ள பல்வேறு நீர் நிலைகளைக் காப்பதற்காக பல மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தவர். இவரது கைது பலத்த கண்டத்துக்குரியது.
சில நாட்களுக்கு முன்புதான் அவதூறு வழக்குகள் அதிகரித்து வருவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராக சில கடுமையான கருத்துகளை தெரிவித்தது. ஆனபோதும் தமிழக அரசின் போக்கில் எவ்வித மாற்றமும் இல்லை. விமர்சனங்கள்தான் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அடிப்படையானவை. ஆனால் இந்த அரசு விமர்சகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களை நசுக்குவதிலேயே குறியாக இருக்கிறது. அரசின் அத்துமீறல்களுக்குக் கட்டுப்படாதவர்களை காவல்துறை போன்ற அரசு அமைப்புகள் சித்ரவதை செய்வது தொடர்ந்து வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன்:
ஜனநாயக முறையில் தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தும் விதத்தில் போராடியது தவறு அல்ல. போராட்டம் நடத்தியவர்களில் மூவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இருவர் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீனில் வந்துள்ளனர். மற்றொருவரான சமூக ஆர்வலர் பியூஸ்மானுயை ஜாமீனிலவிடுவதற்கு அரசு தரப்பில் கடும் ஆட்சேபனை செய்த காரணத்தால் நீதிமன்றம் ஜாமீனில் விடவில்லை. அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அது மட்டுமின்றி மத்திய சிறைச் சாலையில் அவரை கட்டி வைத்து 30க்கும் மேற்பட்ட சிறைக்காவலர்கள் கொடுமையான முறையில் தாக்கியுள்ளதாக, அவரது மனைவி மோனிகா தெரிவித்துள்ளார். இத்தகைய செயல் மனித உரிமையை மீறிய செயலாகும். இத்தகைய நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன்,அவரை ஜாமீனில் விடுவதற்கும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன்:
சேலத்தில் மக்கள் பிரச்சனைக்காக போராட முயன்ற செயல்பாட்டாளர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்படிருப்பதுடன். சிறைக்குள் 30 காவலர்கள் கடுமையாக அவரை தாக்கியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இத்தகைய மனித உரிமை மீறல்கள் வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். குற்றங்களை தடுக்க உரிய முயற்கள் எதையும் செய்யாத காவல்துறை, அப்பாவிகளை தாக்குவது, போராடுவோரை ஒடுக்குவது என்று நடந்துகொண்டு இருப்பது கண்டிக்கத் தக்கதாகும்.












Click it and Unblock the Notifications