தமிழகத்தில் கோர்ட் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: வீர விளையாட்டு குழு ராஜேஷ்
நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என வீர விளையாட்டு மீட்பு குழு தலைவர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என வீர விளையாட்டு மீட்பு குழு தலைவர் ராஜேஷ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவானது இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு கடந்த 2009ம் தமிழக அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியது.
அதன்படி ஒரு சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதனிடையே தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009 ஐ அகற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விலங்குள் நலவாரியம் அதற்கு தடை வாங்கியது. அந்த தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதேநேரம் கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகள் இருந்த போதும் கூட, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை டிசம்பர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தமிழக அரசுடன், வீர விளையாட்டு மீட்புகுழு ராஜேசும் ஒருவர்.
இந்த நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு டிவியில் நெறியாளர் குணசேகரன் நடத்தும் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் வீரவிளையாட்டு மீட்பு குழுத் தலைவர் ராஜேஷ் கலந்துகொண்டு கூறியதாவது: மத்திய அரசு, உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கும் என 3 ஆண்டுகள் நம்பிக்கையோடு இருந்தோம்.
தமிழக அரசு 2009-ம் ஆண்டு இயற்றிய சட்டத்தை செல்லாது என்பதை உறுதி செய்துதான் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்ற மத்திய அரசின் அறிவிக்கைக்கு தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மற்றும் நாங்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டிசம்பர் 1-ந் தேதி தான் விசாரணை நடைபெற உள்ளது. மத்திய அரசின் கீழ் இருக்கக்கூடிய ஆலோசனை அமைப்பான பிராணிகள் நல வாரியத்தின் ஒப்புதல் பெற்று காளையை அந்த பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் தமிழகத்தில் 95 விழுக்காடு ஜல்லிக்கட்டு நடந்து விடும் என்றும் அவர் கூறினார்.