களமிறங்கும் வாரிசுகள்... சீட்டுக்காக பக்கா ஸ்கெட்ச் போடும் காங். தலைவர்கள்
சென்னை: திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியானதும் போதும்... காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர்கள் பலரும் படுபிசியாகிவிட்டனர்...வேறு எதற்கு தங்கள் வாரிசுகளுக்கு எப்படியாவது சீட்டு வாங்கிவிட வேண்டும் என்பதற்குதான்... இம்முறை காங்கிரசில் 10க்கும் மேற்பட்ட வாரிசுகள் களமிறக்கப்படலாம் என தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி; ராகுல் முதல்வர் வேட்பாளர்; ஆட்சியில் பங்கு என்றெல்லாம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் கர்ஜித்துக் கொண்டிருந்தார்... இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன.

விடுவார்களா இளங்கோவன் எதிர்ப்பு தலைவர்கள்? விருப்ப மனு நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்போம் என பேசிக் கொண்டிருந்தார்கள்... திடீரென குலாம்நபி ஆசாத் சென்னை வந்து திமுக- காங்கிரஸ் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.. அவ்வளவுதான் இளங்கோவன் உட்பட அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கப்சிப் ஆனார்கள்...
இப்போது வாரிசுகளுக்கு சீட்டு வாங்குவதற்கான கோதாவில் குதித்துள்ளனர்.... மேலிடத்தில் யாரை பிடித்து சீட்டு வாங்குவது? தொகுதியில் மல்லுகட்டுபவரை, கூட்டணி கட்சியினரை சமாளிப்பது எப்படி என்பதுதான் "பிள்ளைகளை" பெற்ற தலைவர்களின் தீராத பிரச்சனை...
இவர்கள்தான் வாரிசுகள்
அப்படி யார் யார் வாரிசுகள் களத்துக்கு வருகிறார்கள்? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகனும் காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவுத் தலைவருமான திருமகன் ஈ.வே.ரா, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், தங்கபாலு மகன் கார்த்தி, சுதர்சன நாச்சியப்பன் மகன் ஜெயசிம்மா, அன்பரசு மகன் அருள் அன்பரசு, மகள் சுமதி,
திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத், ஆரூண் மகன் ஹசன், நாசே ராமச்சந்திரன் மகன் ராஜேஷ் ஆகியோர் சட்டசபை தேர்தலில் களமிறங்க காத்திருக்கும் வாரிசுகள்.
எந்தெந்த தொகுதிகள்
இளங்கோவன் மகனுக்கு ஈரோடு மாவட்ட தொகுதி, சிதம்பரத்தின் மகனுக்கு காரைக்குடி, சுதர்சன நாச்சியப்பன் மகனுக்கு சிவகங்கை, அன்பரசு குடும்பத்துக்கு சோளிங்கர், தங்கபாலு மகனுக்கு சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதி, ஆரூண் மகனுக்கு ராமநாதபுரம் தொகுதி, திருநாவுக்கரசர் மகனுக்கு அறந்தாங்கி, விஷ்ணுபிரசாத்துக்கு செய்யாறு என தொகுதிகள் 'குறி' வைக்கப்பட்டுள்ளனவாம்.
இவர்கள் குறிவைக்கும் தொகுதிகள் அனைத்தும் கிடைக்குமா? இல்லையா? என்பது திமுகவின் கைகளில் இருக்கிறது என்பதால் அங்கேயும் ஸ்கெட்ச் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார்களாம் இந்த தலைவர்கள்.
ஆக காங்கிரசில் அடுத்த கோஷ்டி தலைவர்கள் ரெடி?












Click it and Unblock the Notifications