"நம்மை மதிக்கும் கட்சி"யுடன் கூட்டணி: ராகுலிடம் சொன்ன ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: லோக்சபா தேர்தலில் நம்மை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார். அதாவது தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதைத்தான் ராகுலிடம் இளங்கோவன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுக தங்களுடன் இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் உறுதியாக இருக்கின்றன. பாஜகவும் தம் பங்குக்கு மெகா கூட்டணிக்கு போராடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் காங்கிரஸ் கட்சிதான் நட்டாற்றில் விட்ட கதையாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கழற்றிவிட்ட திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்கவும் காங்கிரஸ் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ராகுல் மந்திராலோசனை
இந்நிலையில் டெல்லியில் கடந்த 18-ந் தேதி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி லோக்சபா தேர்தல் குறித்து மந்திராலோசனை நடத்தியுள்ளார்.

ஈ.வி.கே.எஸ். அதிரடி
இந்தக் கூட்டத்தில் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழகத்தில் எல்லா கட்சிகளுமே வேஸ்ட். நாம தனித்தே போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக அதிரடியாக பேசியிருக்கிறார்.

ராகுல் குறுக்கீடு
அப்போது குறுக்கிட்டுப் பேசிய ராகுல், மக்கள் நினைப்பது இருக்கட்டும்.. நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என கிடுக்குப்பிடி போட்டிருக்கிறார்.

நழுவல்
இதற்கு, தனித்துப் போட்டியிடலாம் அல்லது 'நம்மை மதிக்கும்' கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று நழுவலாகவும் பூடகமாகவும் பேசியிருக்கிறார்.

தேமுதிகவா? திமுகவா?
இளங்கோவனைப் பொறுத்தவரையில் திமுக எட்டிக்காய் கசப்பு. தேமுதிகதான் அவரது தேர்வில் முன்னணியில் இருப்பது. அதனை மனதில் வைத்துதான் 'நம்மை மதிக்கும்' கட்சியுடன் கூட்டணி என்று இளங்கோவன் பேசியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

பொங்கிய ஞானதேசிகன்
இதேகூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பொங்கி எழுந்திருக்கிறார். கூட்டணி குறித்து பேச வரும் மேலிடத் தலைவர்கள் எங்களை வெளியே உட்காரவைத்துவிட்டு பேசுகிறார்கள். இப்படி இருந்தால் எங்களுக்கு எப்படி மரியாதை கிடைக்கும்? எங்களையும் பேச்சுவார்த்தையின் போது அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications