காங்கிரஸ் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு... உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இன்று அந்த மனு மீது விசாரணை நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதா சந்திப்பை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்ததையடுத்து, அ.தி.மு.க.வினர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, பா.ஜ.க. வினரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், காங்ரிஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் ஆளுங்கட்சி போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக நேற்றே விசாரிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நிராகரித்தார்.
இதையடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.