ஜெயலலிதாவுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் - 'ஏர்போர்ட் நாசா'
சென்னை: தமிழ்நாட்டினை ஆட்சி செய்வதற்கு தலைமை இல்லாதது போன்ற ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. ஜெயலலிதா குறித்த வழக்கு கோர்ட்டில் உள்ளது. எனவே அதுகுறித்து நான் பேசுவது நல்லதல்ல. உச்சநீதிமன்றத்தில் அவருக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி மும்பையில் இருந்து சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஜெயலலிதா வழக்கு விசாரணை:
அப்போது அவர், ‘'ஜெயலலிதா வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து விமர்சிக்கவோ கருத்து கூறவோ விரும்பவில்லை. அந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது. இந்த நேரத்தில் நான் பேசுவது நல்லதல்ல.
அமைதியற்ற சூழ்நிலை:
தமிழகத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவுவது நல்லதல்ல. தமிழகம் அமைதியான நிலைக்கு வந்து வளர்ச்சிப்பாதையில் செல்ல வேண்டும். தமிழகத்தில் தலைமை இல்லாதது போன்ற நிலை உள்ளது.
நல்ல தீர்ப்பு வரும்:
ஜெயலலிதா ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். அதில் அவருக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்..
அதிகமான தாக்குதல்:
அவர் மேலும், ‘'மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தபோது மீனவர்கள் மீது நடந்த தாக்குதலை விட தற்போது பாஜக ஆட்சியில் 5 மடங்கு அதிகமாகி உள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் மீனவர்கள் படகுடன் மீட்கப்பட்டனர். ஆனால் தற்போது படகுகள் இன்றி மீனவர்கள் மீட்கப்படுகின்றனர்.
நடவடிக்கை இல்லை:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக, காரைக்கால் மீனவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்றனர். ஆனால் மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சுமூக தீர்வு தேவை:
காங்கிரஸ் ஆட்சியில் இருநாட்டு மீனவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு தான் நல்ல காலம். ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.
தீவிரவாதிகள் ஊடுருவல்:
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசு பாகிஸ்தானுடன் மென்மையான போக்கை கடைபிடிப்பதால் ஊடுருவல் நடப்பதாக கூறினார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருநாட்டு ராணுவத்தினர் இடையே தான் சண்டை நடக்கும். பாகிஸ்தானிற்கு இந்தியா தகுந்த பதிலடி தந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் ஊருடுவல் அதிகமாகிவிட்டது.
அரசின் பதில் என்ன? :
இந்திய ராணுவத்தினர் மட்டுமின்றி அப்பாவி மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு பாஜக அரசு என்ன பதில் சொல்ல போகிறது''என்று கூறினார்.












Click it and Unblock the Notifications