விருதுநகரில் கோஷ்டி பூசலில் நனைந்த குஷ்பு… போட்டி போட்டு வரவேற்பு
விருதுநகர்: கோஷ்டி பூசலையும் காங்கிரஸ் கட்சியையும் பிரிக்கவே முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு விருதுநகரில் குஷ்பு பங்கேற்கும் முதல் கூட்டத்தில் இது மீண்டும் அரங்கேறியுள்ளது.
காங்கிரஸ்கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரான விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை பாரதியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியில் குஷ்பூ இணைந்த பிறகு முதன்முதலாக விருதுநகரில் நடைபெறும் கூட்டத்தில்தான் அவர் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி.மாணிக்கம் தாகூர் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
நடிகை குஷ்பூ பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால் காங்கிரஸ் கட்சியினர் தடபுடலாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அந்த வரவேற்பில் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோஷ்டி பூசலை அரங்கேற்றினர்.
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் ஒரு கோஷ்டி, முன்னாள் மாவட்ட தலைவர் சிவகாசி கணேசன் ஒரு கோஷ்டி, சிவகாசி அரசன் நிறுவனத்தின் தொழிலதிபர் விஜயக்குமார் தலைமையில் ஒரு கோஷ்டி என்று ஏகப்பட்ட கோஷ்டிகள் இயங்கி வருகின்றன.
மேலும், பொதுக்கூட்டத்திற்கு வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குஷ்பூ ஆகியோரை வரவேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையிலான கோஷ்டியினர் நாளிதழ்களிலும், சுவர்களிலும் விளம்பரங்களையும் செய்தனர்.
அதில் முன்னாள் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் பெயர் இல்லை. அதேபோல், விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரான வேலாயுதம் பெயரும் இல்லை. ஏனென்றால் வேலாயுதம் முன்னாள் எம்.பி., மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர்.
அதுபோல் மாணிக்கம் தாகூர் தரப்பில் அளிக்கப்பட்ட விளம்பரத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் பெயரும், நடிகை குஷ்பூ பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் பெயர்கள் அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications