காவிரியால் இணைக்க முடியாத தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளை இணைத்த ராகுல் காந்தி!
காவிரிக்காக நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றிணையாத திருநாவுக்கரசர், இளங்கோவன் கோஷ்டியினர், இன்று சென்னையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் மேடையே பகிர்ந்தனர்.
சென்னை: ராகுல் காந்தி கைதுக்கு எதிராக சென்னையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியின் எதிர் கோஷ்டி தலைவர்கள் இணைந்து காட்சியளித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக பதவி வகித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கடந்த சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்., நீ...ண்ட பரிசீலனைக்கு பிறகு திருநாவுக்கரசருக்கு அப்பதவி வழங்கப்பட்டது.
இதனால் இளங்கோவன் ஆதரவாளர்கள் அதிருப்தியிலிருந்தனர். "வேறு யாருக்கு பதவியை கொடுத்திருந்தாலும் கூட பரவாயில்லை, கட்சி மாறுவதை வழக்கமாக கொண்டிருந்த திருநாவுக்கரசருக்கு கொடுத்துவிட்டார்களே.." என்ற முணுமுணுப்பு இளங்கோவன் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் எழுந்தது.

உண்ணாவிரத போராட்டம்
இதனால் வழக்கம்போல கோஷ்டிகள் முறைத்துக் கொண்டனர். காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வாதிட்டதை கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம், 15ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி முன்னிலை வகித்தார்.

இளங்கோவன் மிஸ்சிங்
இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் குமரி ஆனந்தன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, ப.சிதம்பரம் மற்றும் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் செல்லக்குமார், திருச்சி மாவட்ட தலைவர்கள் ஆர்.சி.பாபு (தெற்கு), ஜெயப்பிரகாஷ் (வடக்கு) மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புறக்கணித்த இளங்கோவன்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் பதவியேற்றதும் அவரது தலைமையில் நடைபெற்ற முதல் போராட்டம் இது என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவரது ஆதரவாளர்கள் திருச்சி வந்திருந்தனர். இந்த போராட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்பேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.

இணைந்த கைகள்
மத்திய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தில் கூட இளங்கோவன் பங்கேற்காததால், இரு தலைவர்களுக்கும் பனிப்போர் வெடித்துவிட்டதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், ராகுல் காந்தி டெல்லியில் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் இளங்கோவன் பங்கேற்றார். திருநாவுக்கரசருடன் ஒரே மேடையை அவர் பகிர்ந்து கொண்டார்.

குஷ்பு, நக்மா
குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், குஷ்பூ, நக்மா, உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் குஷ்பு மற்றும் நக்மா நடுவே பனிப்போர் இருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு. ஆனால் அத்தனை பனிப்போர்களையும் மீறி இன்று தலைவர்கள் ஒன்றிணைந்தனர். ராகுல் காந்திக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால், கட்சியில் கதை முடிந்துவிடும் என்பதுதான் இந்த இணைவுக்கு காரணம் என்று சிரிக்கிறார்கள் சில கதர் வேட்டிகள்.












Click it and Unblock the Notifications