தீர்மானத்திற்கு திமுக, தேமுதிக ஆதரவு- புறக்கணித்த காங்., சிபிஎம்- கிருஷ்ணசாமி வெளியேற்றம்
சென்னை: தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்தன. ஆனால் தீர்மானம் குரல்வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்பே தங்களது கட்சிகளின் கருத்தை பதிவு செய்துவிட்டு சபையில் இருந்து வெளியேறிவிட்டனர்.
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை முற்றிலும் புறக்கணிக்க வலியுறுத்தி மீண்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தீர்மானத்தின் போது அனைத்து கட்சி தலைவர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். அப்போது பேசிய சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமார், பிரதமர் மன்மோகன்சிங்கை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
காங். வெளிநடப்பு
அத்துடன் பேசாத பிரதமர் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் பதிலளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும், சரத்குமார் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
கிருஷ்ணசாமி வெளியேற்றம்
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரதமருக்கு நன்றி தெரிவிக்கக் கோரி பேசினார். ஆனால் அவரை அமரும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சட்டசபையில் இன்று சபாநாயகர் இருக்கைக்கு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவதற்கு புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி முயற்சித்தார். அதைத் தொடர்ந்து அவரை சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் அவர் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
திமுக ஆதரவு- ஸ்டாலின்
தீர்மானத்தின் மீது திமுக சட்டமன்ற குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அரசின் தீர்மானத்தை வரவேற்று வழிமொழிகிறேன் என்றார் .
குரல் வாக்கெடுப்பு
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கருத்தைப் பதிவு செய்தனர் இதன் பின்னர் தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
காங், மார்க்சிஸ்ட் அவையில் இல்லை
சட்டசபையில் தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எ ம்.எல்.ஏக்கள் அவையில் இல்லை. முன்னதாகவே தங்களது கட்சிகளின் கருத்துகளைத் தெரிவித்த உடனேயே அவையில் இருந்து வெளியே சென்றுவிட்டனர்.
வாக்கெடுப்பில் திமுக, தேமுதிக,இ.கம்யூ ஆதரவு
பின்னர் திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
கம்யூ.எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டம்
சட்டசபை கூடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக தலைமை செயலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள், இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications