''மேக்-அப் ராணி''யை காணவில்லை... விஜயதாரணிக்கு கிண்டல் போஸ்டர்
கன்னியாகுமரி: டிவியில் தினசரி வந்து எதிர்கட்சியினரை கடித்து குதறும் எம்.எல்.ஏ விஜயதாரணியை காணவில்லை என்று ஒட்டியுள்ளனர். அடிக்கடி நான் தொகுதி மக்களை சந்திப்பது, நலப்பணித் திட்டங்களை தொடங்கி வைப்பது என செய்திகள் பத்திரிக்கைகளில் வந்துகொண்டுதான் இருக்கிறது அப்புறம் எப்படி நான் காணாமல் போவேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் விஜயதாரணி.
தங்கள் தொகுதி எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.க்கள் தொகுதியை கண்டுகொள்ளவில்லை என்றால், இப்போதெல்லாம் தேர்தல்வரை காத்திருக்க வாக்காளர்கள் தயாரில்லை. தொகுதிப்பக்கம் தலையைக் காட்டாத மக்கள் பிரதிநிதிகளை காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டி ஒரு வாரத்திற்கு ஓட்டுவார்கள்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இதே போல போஸ்டர் ஒட்டியதாக கேள்விப்பட்டுத்தான் அவரும் வேனில் வந்து வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார்.
லேட்டஸ்ட்டாக போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்குத்தான். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ விஜயதரணி தொகுதிக்கு வருவதில்லை என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.
இந்நிலையில், 'விஜயதரணி எம்.எல்.ஏ .வை காணவில்லை' என அவரது தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரால் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேக்அப் பிரியை என்று ஏகத்திற்கும் கிண்டலடித்துள்ளனர் அந்த போஸ்டரில்.
இது குறித்து கருத்து கூறியுள்ள விஜயதாரணியோ, நான் வாரத்தில் 3 நாள் தொகுதியில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறேன். கிராமம் போவோம் மக்களை சந்திப்போம் என்கிற நிகழ்ச்சி மூலம் நானே மக்களை நேரடியாக தேடிச்சென்று சந்தித்தும் வருகிறேன். அடிக்கடி நான் தொகுதி மக்களை சந்திப்பது, நலப்பணித் திட்டங்களை தொடங்கி வைப்பது என செய்திகள் பத்திரிக்கைகளில் வந்துகொண்டுதான் இருக்கிறது.
என்னை காணவில்லை என்று பேனர் வைத்த இடத்தின் அருகே மறுநாள் நான் நிகழ்ச்சியை நடத்தியுள்ளேன். சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு சில கட்சிகள் இப்படி நகைப்புக்குரிய வேலைகளை செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
போஸ்டர் ஒட்டியதெல்லாம் சரிதான்... ஆனால் போஸ்டரில் இருந்த வாசகங்கள்தான் மனதை நெருடுகின்றன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications