எதிர்கட்சி வரிசையில் ஆளே இல்லை.. யாருக்கு பதில் சொன்னார் ஜெ.?- காங். கேள்வி
சென்னை: சட்டசபையில் எதிர்கட்சிகள் வரிசையில் யாருமே இல்லாத போது யாருக்காக முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
காவல்துறை மானியக்கோரிக்கையில் எதிர்கட்சியினர் இல்லாமல் முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தது வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் 79 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்படாத 10 திமுக எம்.எல்.ஏக்களும் சட்டசபைக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
இன்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சபாநாயகர் தனபால் நான்காவது நாளாக இன்றும் மறுப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏக்கள் இன்று சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதாக கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 79 பேர், ஒரு வார காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் திரும்பும் வரை பேரவை புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சஸ்பெண்ட் செய்யப்படாத 10 திமுக எம்.எல்.ஏக்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.
இந்தநிலையிலே திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து இன்று வெளிநடப்பு செய்தததால் எதிர்கட்சி வரிசை இன்றும் காலியானது.
வெளிநடப்புக்குப் பின்னர் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் கே.ஆர். ராமசாமி ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டசபையில் எதிர்கட்சியினர் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக தெரிவித்தார்.
காவல்துறை மானியக்கோரிக்கையின் போது எதிர்கட்சியினர் வரிசையில் உறுப்பினர்கள் யாருமே இல்லாமல் யார் கேள்வி கேட்டார்கள், யாருக்காக முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார் என்று கேட்டார். மேலும் அவர், சட்டசபையில் எதிர்கட்சியினர் யாருமே இல்லாமல் முதல்வர் பதிலளித்து பேசியது வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறினார்.