விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவனுக்கு பாலியல் கொடுமை - தலைமறைவான ஏட்டு சரண்
சென்னை: சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த தலைமைக் காவலர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடந்த ஆண்டு செல்போன் திருட்டு குற்றத்துக்காக விசாரணை செய்ய மாம்பலம் போலீசார் ஒரு சிறுவனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது அந்த சிறுவனை அங்கிருந்த சில காவலர்கள் கட்டாயப்படுத்தி அவனுக்கு மற்ற சிறுவர்களை வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சிபிசிஐடி விசாரணையில் தலைமைக் காவலர் சீனிவாசன் உட்பட 3 போலீசாருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட காவலர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில் 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த தலைமைக் காவலர் சீனிவாசன் ஜார்ஜ் டவுன் 7 ஆவது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து இவ்வழக்கு விசாரணை மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது.