சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 7 வது தளத்தில் மீண்டும் தீ.. மூச்சுதிணறலால் பொதுமக்கள் பலர் பாதிப்பு
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 7வது தளத்தில் மீண்டும் தீ பற்றி எரிவதால் அதிகளவு புகை வெள்யேறி வருகிறது.
சென்னை: தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 2 வது தளத்தில் மீண்டும் தீ பரவி வருவதால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை சில்க்ஸ் கடையின் கீழ் தளத்தில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் கடையில் இருந்து வெளியே புகை வர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் 7 தளங்களுக்கும் தீ பரவியது.

இதைப்பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 5 தீயணைப்பு வண்டிகளில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். உடனடியாக அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்ததால் மாநகராட்சி தண்ணீர் லாரிகளும் கூடுதலாக வரவழைக்கப்பட்டன.
இந்நிலையில் 20 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 55 டன் எடையுள்ள க்ரோ கிரேன் மூலம் 7 மாடிகளில் துளையிட்டு தீயணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடையின் சுவர் மற்றும் கண்ணாடிகளை உடைத்து தீ அணைக்கப்பட்டு வருகிறது. துணிகள் எரிந்ததால் கரும் புகை வெளியில் வந்து கொண்டே இருக்கிறது.
இதனிடையே தீ ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தநிலையில் கட்டிடத்தின் 7வது தளத்தில் மீண்டும் தீ பரவி வருவதால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகளவில் புகை வெளியேறி வெளியேறி வருவதால் அந்தப் பகுதி மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால் 108 ஆம்புலன்சை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 104, 108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications