கன மழை- வெள்ளத்தால் சென்னை ஐ.டி நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு
சென்னை: சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஐ.டி., துறைக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு 15 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்த கனமழையால் சென்னை ஓஎம்ஆரில் உள்ள பெரும்பாலான ஐ.டி நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து ஐ.டி., நிறுவனங்கள் விடுமுறை அளித்தன. தமிழக அரசு சார்பிலும் மழையின் காரணமாக தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கக் கோரி அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் பலரை ஹைதராபாத்துக்கும், பெங்களூருவுக்கும் தற்காலிகமாக இடமாற்றம் செய்தது.
பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பஸ் மூலம் ஹைதராபாத்துக்கும், பெங்களூருவுக்கும் அனுப்பி வைத்ததுடன், கனமழை காரணமாக தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த ஊழியர்களையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் பெய்த கனமழையால் ஐ.டி., துறைக்கு ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மின்சாரம் தொடர்ந்து தடை செய்யப்பட்டதையடுத்து, இருப்பு வைத்திருந்த டீசல் உபயோகப்படுத்தப்பட்டது. டீசலும் முதல் நாளிலேயே தீர்ந்து போனதன் காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டன. பணிக்கு வந்த ஊழியர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதன் காரணமாக நடுத்தர ஐ.டி நிறுவனங்களுக்கு 5 முதல் 10 மில்லியன் டாலர் வரையிலும், பெரிய ஐ.டி., நிறுவனங்களுக்கு 40 முதல் 50 மில்லியன் டாலர் வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல், வாகன உற்பத்தி துறைக்கும் மழை காரணமாக ரூ.15 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கனமழை காரணமாக சிறு, குறு நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பொறியியல் சுற்றுலா துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications