கடனாக பணம் வாங்கிக்கங்க.. வட்டி தர வேண்டாம்.. கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் முயற்சி
500 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் வட்டி இல்லாமல் பணத்தைக் கொடுத்து கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் வட்டிக்கடைக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி: கருப்பு பணத்தை வெள்ளையாக்க வட்டிக்காரர்கள் பலர் பொதுமக்களுக்கு வட்டியில்லாமல் பணம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஒரு நாளைக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பெற முடியும். செக் மூலம் எடுப்பவர்கள் ரூ.10000 வரை எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். வங்கியில் பணம் டெபாசிட் செய்ய இருப்பவர்கள் ரூ.2.5 லட்சம் வரை செலுத்தினாலும் வருமான வரி தொல்லையில்லாமல் செலுத்தலாம். அதற்கு மேல் பணம் டெபாசிட் செய்பவர்களிடம் 200 சதவீத வரி பிடிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் கணக்கில் காட்டாமல் பணத்தை கத்தை கத்தையாக பதுக்கி வைத்திருப்பவர்கள் என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகின்றனர். பலர் தங்களது ஊழியர்கள் மூலம் பணத்தை மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கிராமப்புறங்களில் வட்டி தொழில் செய்யும் செய்வோர் அவர்களது வங்கி கணக்கில் டெபாசிடே செய்வது கிடையாது. கத்தை கத்தையாக பணத்தை கையில் வைத்து கொண்டு வட்டிக்கு விடுவார்கள்.
தற்போது இவர்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மொத்தமாக மாற்ற முடியாமல் தவித்து வருகி்ன்றனர். வட்டிக்கு பணம் கேட்டு அழைத்தவர்களை தேடி பிடித்து வீட்டுக்கே வந்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கொடுத்து வருகின்றனர். இதற்கு வட்டி வேண்டாம் என்று கூறி வருவதாக கூறப்படுகிறது. பணம் தேவையில்லை என்று கூறுபவர்களிடம் கட்டாயப்படுத்தி கொடுத்து வருகின்றனர். இந்த செயல்களால் அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.