இடைத் தேர்தலில் தூள் கிளப்பப் போகுது குக்கர்.. திருச்சியில் தினகரன் உற்சாகப் பேட்டி!
Recommended Video

திருச்சி: திருப்பரங்குன்றம், திருவாரூர் இரு தொகுதி இடைத் தேர்தல்களிலும் அமமுக வேட்பாளர்களே வெல்வார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திருச்சி வந்த அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இரு தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் வாங்கத்தான் போட்டியிடுகிறது என்றும் நக்கலடித்தார். தினகரன் பேட்டியிலிருந்து:

திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும். அ.தி.மு.க.வினர் டெபாசிட் பெறுவதற்காக போராடி வருகின்றனர்.
சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை மக்கள் விரும்பாத திட்டம். இந்த திட்டம் நிச்சயம் வராது. அகலப்படுத்த வேண்டிய சாலைகள் நிறைய உள்ளது. சென்னையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் சாலை, வேலூர் வழியாக பெங்களூரு சாலை, சென்னையில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சேலம் சாலை ஆகியவற்றை அகலப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இயற்கை வளங்கள், விவசாய நிலங்களை அழிக்காமல் இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
அதிமுக.வை பா.ஜ.க. கைவிட்டு விட்டது என்பது லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேசிவருவதில் தெரிகிறது. தி.மு.க.வை நோக்கி பா.ஜ.க. செல்கிறதா? என்பது பற்றி எனக்குத் தெரியாது.
தமிழகத்தில் மின்தடை தொடர்ந்து வருகிறது. காற்றாலை மின்சாரம் வாங்குவதில் பேரம் ஏற்பட்டதால் இருப்பு இருந்த நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளனர். போதுமான இருப்பு நிலக்கரி இல்லாததால் பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. தினமும் 2,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. இதனை தவிர்க்க வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து மின்உற்பத்தி செய்யலாம்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதை அரசியலாக்க வேண்டாம். இதில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார் தினகரன்.












Click it and Unblock the Notifications