சொத்தை அபகரித்த சித்தி.. கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த தொழிலாளர் பலி
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் விஷ்வ பிரபு. இவர் ஒரு கூலித் தொழிலாளி. மதுரையில் இருந்த இவருக்குச் சொந்தமான குடும்பச் சொத்தை சித்தி முறையிலான உறவினர் ஒருவர் அபகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை பைபாஸ் சாலை பொன்மேனிப் பாண்டியன் நகரில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்து மனு அளித்து வந்தாராம். இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஷ்வ பிரபு திடீரென்று தீக்குளித்தார்.
இதனையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி விஷ்வபிரபு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்திலேயே ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.