துப்பாக்கியைத் தூக்கிப் போட்டு பஸ்சில் சீட் பிடித்த போலீஸ்காரர்.. குன்னூரில் பரபரப்பு!
குன்னூர்: குன்னூர் பேருந்து நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவர் தனது இயந்திர துப்பாக்கியைப் போட்டு பேருந்தில் இடம் பிடிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லை என நீண்ட காலமாகவே பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, கோத்தகிரியில் இருந்து வரும் பேருந்துகளை குன்னூர் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்ததுமே பயணிகள் சூழ்ந்து இடம் பிடிக்க போட்டியிடுவர். பேருந்துகளில் இருக்கும் பயணிகள் இறங்கும் முன்னரே, கீழே நிற்கும் பயணிகள் பேருந்து ஜன்னல் வழியாக கர்ச்சீப், குடை, புத்தகம் உள்ளிட்டவற்றைப் போட்டு இடம் பிடித்து விடுவர். பின்னர் பயணிகள் இறங்கியதும் பேருந்தில் ஏறி அமர்வர். இது வாடிக்கையாக நடைபெறும் செயல் தான்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோத்தகிரியில் இருந்து குன்னூர் வந்த பேருந்திலும் பயணிகள் இடம் பிடிக்க முண்டியடித்தனர். அப்போது அங்கு பேருந்துக்காக காத்திருந்த போலீஸ்காரர் ஒருவர் தனது இயந்திரத் துப்பாக்கியை ஜன்னல் வழியாகத் தூக்கிப் போட்டு ஒரு சீட்டில் இடம் பிடித்தார்.
பின்னர் பேருந்தில் ஏறிய பயணிகள், ஒரு இருக்கையில் இயந்திரத் துப்பாக்கி ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். துப்பாக்கி கிடந்ததால் 3 பேர் அமரும் அந்த இருக்கையில் பயணிகள் யாரும் அமரவில்லை. துப்பாக்கி தவறுதலாக வெடித்துவிடுமோ என்று அஞ்சியபடி பயணிகள் இருந்தனர். பின்னர், மெதுவாக பேருந்தில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்தார் அந்தப் போலீஸ்காரர்.
இயந்திரத் துப்பாக்கியைப் போட்டு போலீஸ்காரர் பேருந்தில் இருக்கை பிடித்த சம்பவத்தால் குன்னூர் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.