சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றி ஊட்டியில் பலாத்காரம்: மும்பை பெண் புகார்
உதகமண்டலம்: வாட்ஸ் ஆப் மூலம் அறிமுகமான மும்பை பெண்ணை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி உதகமண்டலத்திற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மும்பை பாடலிபுத்திராநகரை சேர்ந்தவர் சோகன்பாபு. இவருடைய மகள் குமாரிமாதுரி (வயது 27). இவர் ஆன் - லைன் மூலமாக உதகமண்டலம் மத்திய போலீசில் பதிவு செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் எனக்கு வாட்ஸ்ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்கள் ஆனோம். இந்த நிலையில் எனது நண்பர் உதகமண்டலத்தில் தமிழ் சினிமா படப்பிடிப்பு நடப்பதாகவும் அதில் நடிக்க வைக்கிறேன் என்றும் கூறினார். இதை நம்பிய நான், கடந்த மே மாதம் அவருடன் உதகமண்டலம் வந்தேன்.
உதகை எட்டின்ஸ் சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தோம். அப்போது என்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நாங்கள் மும்பைக்கு திரும்பி வந்து விட்டோம். தற்போது எனது நண்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
நாங்கள் உதகையில் உள்ள விடுதியில் தங்கி இருந்த போது கண்காணிப்பு கேமராவில் நானும், அவரும் பதிவாகி உள்ளோம். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, என்னை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மும்பை பெண் தன்னுடன் வந்தவர் பெயரை டோத்தி என்று குறிப்பிட்டு உள்ளார். அவரது படம் மற்றும் பிற தகவல்கள் குறித்த விபரங்களை அந்த பெண்ணிடம் போலீசார் கேட்டுள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் உதகமண்டலம் மத்திய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து உள்ளார்.
ஆன்-லைன் மூலமாகவே அவரது புகார் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள உண்மைத்தன்மை பற்றியும், முழுதகவல்கள் கிடைத்த பின்னர் முழு அளவில் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.