தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் குடகு ரிசார்ட்டுக்கு போலீஸ் நோட்டீஸ்
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குடகு மாவட்டத்தில் தங்கியுள்ள தனியார் ரிசார்ட்டின் உரிமையாளருக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கூர்க்: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ளது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்காதது ஏன் என்று விளக்கம் கேட்டு அந்த விடுதி உரிமையாளருக்கு குடகு மாவட்ட காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் சோமவார்பேட்டை தாலுகா, குஷால்நகர் எல்லை 7வது ஓசகோட்டை என்ற பகுதியில் உள்ள பன்டிக்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் ஆகியோருக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அங்கு தங்கியுள்ள எம்எல்ஏக்களின் செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணை
இதனால் அவர்கள் அந்த விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்த நேற்று தமிழக போலீஸார் ரிசார்ட் சென்று விசாரணை நடத்தினர். எனினும் தங்கள் சுயவிருப்பத்தின் பேரில்தான் தங்கியுள்ளோம் என எம்எல்ஏக்கள் தெரிவித்ததால் அவர்கள் திரும்பி விட்டனர்.
காவல் துறை நோட்டீஸ்
தமிழக காவல் துறையினர் விடுதியில் சோதனை நடத்தியபோதுதான் தமிழக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விவரம் குடகு மாவட்ட காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விடுதி உரிமையாளருக்கு காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தகவல் ஏதும் இல்லை
அதில் கர்நாடக காவல் துறையின் விதிபடி சுற்றுலா தலங்களில் உள்ள விடுதிகளில் தங்குவோர், தங்கிவிட்டு செல்வோர் குறித்த பட்டியலை தினமும் விடுதி நிர்வாகம் அருகில் உள்ள காவல் துறையில் தெரிவிக்க வேண்டும் என்பதாகும். அவ்வாறிருக்க எம்எல்ஏக்கள் தங்கி ஒரு வாரம் ஆகியும் அதுகுறித்து அருகில் உள்ள சந்திகொப்பா காவல் நிலையத்தில் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை.
3 நாள்கள் அவகாசம்
தமிழக எம்எல்ஏக்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு. எனவே இன்னும் 3 நாள்களுக்குள் விடுதி நிர்வாகம் காவல் துறையில் விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள்களுக்குள் பதிலளிக்காவிட்டால் சுற்றுலா துறை சீல் வைக்கும் வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.