செம்மரக்கடத்தல்: மோகனாவின் உறவினர் சரவணனுக்கு 2 நாள் போலீஸ் காவல்
வேலூர்: செம்மரக்கடத்தல் வழக்கு தொடர்பாக வேலூர் கரகாட்டக் கலைஞர் மோகனாவின் உறவினர் சரவணனை போலீஸ் காவலில் விசாரிக்க 2 நாள்கள் அனுமதி வழங்கி காட்பாடி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
வேலூர், கஸ்பாவை சேர்ந்த கரகாட்டக் கலைஞர் மோகனாவின் காட்பாடி, தாராபடவேடு வீட்டில் போலீஸார் அண்மையில் நடத்திய திடீர் சோதனையில், ரூ.4.04 கோடி ரொக்கம், 73 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் தொடர்பு இருப்பதாக, அணைக்கட்டு ஒன்றிய திமுக செயலாளர் பாபுவை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மோகனா, அவரது அக்கா நிர்மலா, நிர்மலாவின் மகன் சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கூட்டாளிகள் கைது
சரவணனின் கூட்டாளிகளான அரியூர் காமராஜர் நகரைச் சேர்ந்த வேல்முருகன் (34), கொணவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (எ) கும்கி சதீஷ் (28) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 3 சொகுசு கார்கள், ஒரு லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸ் காவல்
இதனிடையே சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரவணனை போலீஸார் காட்பாடி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர். அப்போது, சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க 7 நாள் அனுமதி கேட்டு காட்பாடி காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
48 மணிநேரம் கஸ்ட்டி
இம் மனுவை விசாரித்த நீதிபதி சுஜாதா, சரவணனை விசாரிக்க காவல் துறைக்கு 2 நாள் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் சரவணனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
நான் அப்பாவி
காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சரவணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, எனக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். நான் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய சித்தி தொடர்பான வழக்கு என்பதால் இவ் வழக்கில் என்னையும் சேர்த்து விட்டனர் என்று கூறினார்.
மோகனாவிற்கு சிக்கல்
இதனிடையே திமுக பிரமுகர் பாபு, போலீசிடம் அளித்த வாக்கு மூலத்தில், கரகாட்டக்கலைஞர் மோகனாவிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. என்னிடம் அதிகமான ஆட்கள் இருந்தார்கள். எனவே செம்மரக்கடத்தலில் இருவரும் இணைந்து செயல்பட்டோம் என்று தெரிவித்திருக்கிறார். பாபுவிற்கு குருவாக இருப்பவர் அந்தப் பகுதியின் கதர்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏவாம். கடந்த 14 ஆண்டுகளாக மோகனாவுடன் சேர்ந்து செம்மரக்கடத்தல் செய்து வருவதாக பல விபரங்களை தெரிவித்துள்ளார். இதனால் மோகனாவிற்கு சிக்கல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications