இசக்கி கொலை வழக்கு: வெங்கடேஷ் பண்ணையார் தம்பி சுபாஷ் பண்ணையார் விடுதலை
தூத்துக்குடி: தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை கொலை செய்ய நடந்த முயற்சியில் பொன் இசக்கி என்பவர் கெலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார் உட்பட 3 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு தூத்துக்குடியில் சிதம்பரநகர் பகுதியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அந்தத் தாக்குதலில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் சோரீஸ்புரத்தை சேர்ந்த பொன் இசக்கி என்பவர் வெட்டி கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக தூத்துக்குடி தெற்கு போலீசார் வெங்கடேஷ் பண்ணையார், அவரது தம்பி சுபாஷ் பண்ணையார் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு.தூத்துக்குடி கூடுதல் அமர்வு முதலாவது கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வெங்கடேஷ் பண்ணையார், ஏற்கனவே போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு விட்டார். சுபாஷ் பண்ணையாரும் நீண்ட நாட்கள் இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதனால் ஒரு தரப்பினர் தங்கள் மீது போடப்பட்ட வழக்கினை தனியாக விசாரிக்க கோரினர். இதன் பேரில் அதில் பலர் விடுவிக்கப்பட்டனர். இறுதியாக சுபாஷ்பண்ணையார், சேகர், ஹரி ஆகிய மூன்று பேர் மீதுள்ள வழக்கு மட்டும் முடிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில்தற்போது இந்த வழக்கில் சுபாஷ் பண்ணையார் ஆஜரானதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை முடிவடைந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கமலாவதி, அரசு தரப்பு சாட்சி யங்கள், சரிவர நிரூபிக்கப்படாததால் சுபாஷ் பண்ணையார் உட்பட மூவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications