டிவிட்டரில் ஜெ. பற்றி அவதூறு: இரு வழக்குகளில் சு.சுவாமிக்கு நீதிமன்றம் சம்மன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டு அவதூறு வழக்குகளில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாநகர வழக்கறிஞர் ஜெகன் நேற்று சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், சுப்பிரமணியன் சுவாமி, தன்னுடைய டிவிட்டர் இணையதளம் பக்கத்தில் கடந்த 20ம் தேதி, ‘ஜெயலலிதாவுக்கு ஜெயில்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளார். இதில், முதலமைச்சரை பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கள் அனைத்தும் தவறான, ஆதாரமற்ற கருத்துக்களாகும். எனவே, அவர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

அதேபோல அவர் மீது தாக்கல் செய்துள்ள மற்றொரு அவதூறு வழக்கில், "சுப்பிரமணியசாமி தனது டிவிட்டர் இணையதளம் பக்கத்தில் கடந்த 17ஆம் தேதி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில், நீலகிரியை சேர்ந்த பா.ஜ.க.வினர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் சொத்து விவரங்களை எனக்கு தந்துள்ளனர். அதனடிப்படையில் மேலும் ஒரு சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.
இது ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டுகளாகும். முதலமைச்சருக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட கட்டுரையாகும். எனவே, சுப்பிரமணியசாமி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த இரண்டு வழக்குகளும், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்டோபர் 30ம் தேதி சுப்பிரமணியன் சுவாமி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். ஜெயலலிதா ஏற்கனவே தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில் ஏற்கனவே, சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications