குற்றாலத்தில் வரலாறு காணாத வெள்ளம்.. ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரால் வந்த வினை.. நடைபாலத்தை பாருங்க
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் இன்று வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பேரிரைச்சலுடன் கொட்டும் தண்ணீரில் நடைபாலத்தின் தடுப்புகள் அடித்து செல்லப்பட்டதோடு, கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து நடைப்பாதைகள் சேதமடைந்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் கனமழை கொட்டி வருகிறது. பெஞ்சல் புயல் கரையை கடந்தலும் கூட வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு புகுதியாக மாறியது தான் இந்த மழைக்கு காரணம்.

நேற்று முதல் இன்று காலை வரை தென்காசி மாவட்டத்தில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. முன்னதாக நேற்று தென்காசி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த கனமழையின் காரணமாக நேற்று காலை முதல் சுற்றுலா தலமான குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. மெயினருவி, ஐந்தருவி, சிற்றவி, புலி அருவி, பழைய குற்றால அருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மாலையில் பெய்த கனமழையால் இரவில் குற்றாலத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. பொதுவாக குற்றாலம் மெயினருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தடுப்பை தாண்டி நேரடியாக தடாகத்தில் வந்து அருவி தண்ணீர் விழும்.

ஆனால் நேற்று பெய்த கனமழையால் தடாகத்தையும் தாண்டி பாறை மீது பேரிரைச்சலுடன் தண்ணீர் வந்து விழுந்தது. அதேபோல் ஆக்ரோஷமாக விழுந்த தண்ணீரால் அருவிக்கு செல்லும் நடைப்பாதை சேதமடைந்தது. அதேபோல் தண்ணீரில் இறங்காமல் பொதுமக்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைப்பாலத்தின் 2வது பகுதியில் இரும்பு கம்பியால் ஏற்படுத்தப்பட்டு இருந்த தடை பெயர்ந்தது.

அதேபோல் பொதுமக்களை கண்காணிக்க வசதியாக குற்றால மெயினருவி அருகே போலீசாருக்காக அமைக்கப்பட்டு இருந்த கூண்டும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அதுமட்டுமின்றி குற்றால அருவியில் ஏற்பட்ட வரலாறு காணாத இந்த வெள்ளம் அருகே உள்ள கடைகளுக்குள்ளும் புகுந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் தள்போது இணையதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications