பிரிந்து சென்ற காதலனை சந்திக்க ‘கடத்தல், மொட்டை’ நாடகம் போட்ட பள்ளி மாணவி - விசாரணையில் அம்பலம் !
கோவை : பிரிந்து சென்ற காதலனின் கவனத்தைத் தன் மீது திருப்புவதற்காக, மர்மநபர்கள் கடத்திச் சென்று மொட்டையடித்ததாக பள்ளி மாணவி நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவை, பேரூர் படித்துறையில் கை, கால்கள் கட்டப்பட்டு, தலைமுடி மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் பள்ளிச் சீருடையுடன் 16 வயது மாணவி ஒருவர் கிடப்பதாக தொலைபேசி வாயிலாக பேரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் கட்டுக்களை அவிழ்த்து விட்டனர். பின்னர் அச்சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சிறுவாணி ரோட்டில் இருக்கும் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் எனத் தெரிய வந்தது.
மேலும், பள்ளிக்கு செல்லும் வழியில் மர்மநபர்கள் தன்னைக் கடத்தி, தனது தலைமுடியை மழித்து, மொட்டையடித்து விட்டதாக அம்மாணவி தெரிவித்துள்ளார்.அப்போது அச்சிறுமியின் அருகில் சிறுவன் ஒருவர் நின்றுள்ளார். அவர் தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மாணவியின் பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார், அருகில் நின்ற சிறுவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறவே, அவர்கள் இருவரும் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைக்கப் பட்டனர்.
மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திராணி ஷோபியா மற்றும் போலீசார் தனி அறையில் ரூபிணியிடம் விசாரணை நடத்தினார். அப்போது ‘நான் பள்ளிக்கு சென்று விட்டு திரும்பும் போது 4 பேர் வேனில் வந்தனர். அவர்கள் என்னை வேனுக்குள் குண்டு கட்டாக தூக்கி போட்டு கடத்தினர். பேரூர் சென்றதும் எனக்கு மொட்டை போட்டனர். பின்னர் அங்குள்ள புதருக்குள் வீசி விட்டுச் சென்றனர்' என்றார்.
அதனைத் தொடர்ந்து மாணவியின் அருகில் நின்று கொண்டிருந்ததாக அழைத்து வரப்பட்ட சிறுவனிடம் தனியே போலீஸ் விசாரித்தனர். அப்போது அவர், ‘நான் பேரூர் படித்துறை அருகே சென்று கொண்டிருந்தேன். அப்போது இந்த மாணவி என்னிடம் ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்தார்.
பின்னர் அந்த பகுதியில் காயின் பாக்ஸ் போன் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு நான் ஒரு போன் நம்பருக்கு டயல் செய்வேன். போனை எடுத்ததும் ‘உங்கள் மகளை கடத்திய கும்பல் அவருக்கு மொட்டை அடித்து பேரூர் படித்துறை அருகே வீசி விட்டுச் சென்றனர்' என்று சொல்லுமாறு கூறினார். நானும் அப்படியே கூறினேன் என்றார்.
இதன் மூலம் அம்மாணவி கடத்தல் நாடகம் ஆடியது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து மாணவியிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அம்மாணவி அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்ததும், காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்ததால் காதலர் பிரிந்து சென்றதும் தெரிய வந்தது. எனவே, பிரிந்து சென்ற காதலரின் கவனத்தைத் தன் மீது திருப்பவே மாணவி கடத்தல் நாடகம் ஆடியதும் உறுதியானது.
அதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், ‘இனிமேல் இதுபோன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டேன்' என்று மாணவியிடம் எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோருடன் அனுப்பி விட்டனர்.
முன்னதாக வாகனப்போக்குவரத்து மிகுந்த சாலையில் மாணவி கடத்தப்c பட்டு, மொட்டையடிக்கப் பட்டதாக வெளியான செய்தியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.