வைகோ தலைமையிலான ம.ந. கூட்டணியில் இருந்து விரைவில் வெளியேறுகிறது இ.கம்யூ?
சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியின் தலைவரகள் ஒன்றாகக் கூடி மாநாடெல்லாம் போட்டாலும்கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விரைவில் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் என்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்பட்டு வருகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலராக தா. பாண்டியன் பொறுப்பேற்ற பின்னர் அது அதிமுகவின் கிளைக் கழகமாகவே உருமாறிப் போனது. கண்மூடித்தனமாக அதிமுகவை ஆதரிப்பது என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்து வந்தது.
தற்போது இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலராக முத்தரசன் இருந்தபோதும் இன்னும் தா.பாண்டியன் கையே ஓங்கி இருக்கிறது. குறிப்பாக திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றதை தா.பா. வகையறாக்கள் சகிக்கவே இல்லை.

தா.பா. எதிர்ப்பு
இதன் உச்சமாக மக்கள் நலக் கூட்டியக்கத்தை 'கூட்டணியாக' மாற்றுவதை வெளிப்படையாகவே தா. பாண்டியன் எதிர்த்தார். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் இடம்பெறாத கூட்டணியில்தான் இருப்போம். தி.மு.க. அணியில் காங்கிரஸ் இருந்ததால் கடந்த காலத்தில் அக்கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை. தற்போது அ.தி.மு.க, பா.ஜ.க. இடையே கூட்டணி அமையும் என்கிறார்கள்.. இதுவரை அதிகாரப்பூர்வமாக அப்படி எதுவும் அமையவில்லை. மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் என்பது மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் இருக்கும்வரை நீடிக்கும். இதற்கும் தேர்தலுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை எனக் கூறி இருந்தார். இப்படி மக்கள் நலக் கூட்டணி உதயமாவதற்கு முன்பே போர்க்கொடி தூக்கியவர் தா. பாண்டியன்.

நல்லகண்ணு முதல்வர் வேட்பாளர்...
பின்னர் மக்கள் நலக் கூட்டணி உதயமான பின்னர், முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை இடதுசாரிகள் முன்வைத்தனர். ஆனால் முதல்வர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்கக் கூடாது என்பதில் வைகோ பிடிவாதமாக இருந்து வருகிறார்.

சட்டசபையில் தனி ஆவர்த்தனம்
அத்துடன் பொதுமேடைகளில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நின்றாலும் இன்னமும் அதிமுக ஆதரவு மனநிலையில்தான் அக்கட்சி இருக்கிறது என்பதை சட்டசபை நிகழ்ச்சிகள் அம்பலப்படுத்திவிட்டன. திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்சனையை அதிமுக அரசு சட்டசபையில் கொண்டுவந்த போது மார்க்சிஸ்ட் கட்சி இதை எதிர்த்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏக்களோ மவுனமாக இருந்தனர். இதேபோல் சட்டசபையில் அதிமுகவுக்கு ஆதரவான நிலையிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் செயல்பட்டனர்.

ஃபேஸ்புக்கில் தனி பக்கம்
இந்நிலையில் மதுரையில் மக்கள் நலக் கூட்டணியின் மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொண்ட அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் "Nallakannu 4 CM" என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் ஒரு அக்கவுண்ட் தொடங்கப்பட்டு (https://www.facebook.com/nallakannu4cm/) நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கோரும் பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் அதிமுக கூட்டணியில்?
ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் சட்டசபை தேர்தலை நிச்சயம் கூட்டணிக் கட்சிகளோடுதான் சந்திக்கப் போவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நலக் கூட்டணியில் இருந்தபோதும் மெல்ல மெல்ல அது அதிமுகவை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது.
விரைவில் வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறி அதிமுக கூட்டணியில் இணையலாம் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications