சிறுதாவூர் பங்களா பணத்தை பிடித்துக் கொடுக்க வேண்டியதுதானே- வைகோ மீது தா.பா. மீண்டும் பாய்ச்சல்
சென்னை: மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை அக்கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் மீண்டும் கடுமையாக தாக்கி உள்ளார். ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார் கூறி வரும் வைகோவே அந்த பணத்தை பறிமுதல் செய்து தந்திருக்கலாமே எனவும் காட்டமாக தா. பாண்டியன் கூறியுள்ளார்.
தீவிர ஜெயலலிதா ஆதரவாளரான பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக கூட்டணியில் இணையாமல் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததை ஆதரிக்கவில்லை என்பதையே அவரது சமீபத்திய பேட்டிகளும் கருத்துக்களும் தெரிவிக்கின்றன.

மக்கள் நலக் கூட்டியக்கம், மக்கள் நலக் கூட்டணியாக்கப்பட்டது முதலே கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார் தா. பாண்டியன். குறிப்பாக வைகோ மீது அவ்வப்போது கடுமையான விமர்சனங்களை தா. பாண்டியன் முன்வைத்து வருகிறார்.
இதனிடையே ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் கண்டெய்னர்களில் பணம் இறக்கப்பட்டதாகவும் பின்னர் இது ஆந்திராவுக்கு கடத்தப்பட்டதாகவும் வைகோ தொடர்ந்து கூறி வருகிறார்.
இது குறித்து திருச்சியில் தா. பாண்டியனிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், சிறுதாவூர் பங்களாவுக்கு கன்டெய்னர்களில் பணத்தை கொண்டு சென்றதை கண்டுபிடித்திருந்தால், தயவுசெய்து அதில் ஒரு கட்டை எடுத்து, எங்கள் கட்சி அலுவலகத்தில் தேர்தல் நன்கொடையாகக் கொடுத்து ரசீது வாங்கிக் கொள்ளுங்கள்.
இந்தப் புகாரைச் சொன்னவர் (வைகோ) பணத்தைப் பிடித்துக் கொடுக்க வேண்டுமல்லவா? என்றார்.
வைகோவை தொடர்ந்து சீண்டும் விதமாக தா. பாண்டியன் பேசிவருவது மக்கள் நலக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications