'வருத்தப்படுவதை நிறுத்துங்க டே... நானும் இருந்து எடுத்த முடிவு டே..!' பேஸ்புக்கில் பாலபாரதி விளக்கம்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடாதது குறித்து எம்.எல்.ஏ. பாலபாரதி தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டசபை உறுப்பினராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிய பாலபாரதியின் பெயர் இல்லாதது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர் திண்டுக்கல் தொகுதியில் இருந்து தொடர்ந்து 3 முறை சட்டசபை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டவர். ஆனால், இம்முறை அத்தொகுதிக்கு புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாலபாரதி தற்போதைய சட்டசபையில் மார்க்சிஸ்ட் கட்சியின் குழுத் தலைவராக இருக்கிறார். மாநிலக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளரகவும் பொறுப்பு வகிக்கிறார். இதுதவிர தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.
எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட பாலபாரதி, மக்கள் நலக்கூட்டணி, தேமுதிகவுடன் கூட்டணி வைத்தது தொடர்பாக தனது பேஸ்புக்கில், ‘நல்லதோர் வீணை செய்தே..' என வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக தனது பதிவை அவர் நீக்கினார்.
இது வேறு ஒரு நிகழ்வு தொடர்பானது என அவர் விளக்கம் அளித்த போதும், இம்முறை அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததற்கு அதுவே காரணம் எனத் தகவல்கள் வெளியாகின.
அதேசமயம், கட்சி விதிப்படி ஒருவருக்கு 2 முறைக்கு மேல் வாய்ப்பு தரப்படாது. ஆனால், மக்கள் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் கடந்தமுறை 3வது தடவையாக அவருக்கு தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை சம்மதித்தது. ஆனால், இம்முறை அவ்வாறு சிறப்பு ஒதுக்கீடு செய்ய முடியாது என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அடிப்படையிலேயே பாலபாரதிக்கு மீண்டும் சீட் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
பாலபாரதிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படாதது சமூக வலைதளப் பக்கங்களில் விவாதப் பொருளாக மாறியது. இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இவை அனைத்திற்கும் தனது பேஸ்புக் பதிவு மூலம் பதிலளித்துள்ளார் பாலபாரதி. அதில் அவர், ‘வருத்தப்படுவதை நிறுத்துங்க டே, ஏதோ இரங்கல் கூட்டத்திலிருப்பதைப்போல் இருக்கிறது. நானும் இருந்து எடுத்த முடிவு டே' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்தப் பதிவையும் தற்போது அவர் நீக்கிவிட்டதாகத் தெரிகிறது.
இதேபோல், பாலபாரதிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாதது குறித்து தொண்டர் ஒருவர் ஏமாற்றம் தெரிவித்துள்ள பதிவிற்கு பதிலளித்துள்ள பாலபாரதி, ‘கோட்பாடு.மற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பளித்தலின் பொருட்டு' தான் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications