50 பூத்துகளில் முறைகேடு… கண்துடைப்புக்கு ஒரு பூத்தில் மட்டும் மறுவாக்குப் பதிவு: சி.மகேந்திரன்
சென்னை: ஆர்.கே.நகரில் 50க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டுக்கள் போட்டு அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் கண்துடைப்புக்காக மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.மகேந்திரன் கூறியுள்ளார். வாக்காளர்களின் கைரேகையை பதிவு செய்து வாக்களிப்பதன் மூலமே முறைகேடுகளை தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 230 வாக்குச்சாவடிகளில் 181வது வாக்குச்சாவடியில் அதிமுகவினர் கள்ள ஓட்டுகள் போட்டதாக புகார்கள் எழுந்தது.
அந்த வாக்குச்சாவடியின் அதிகாரி, வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத நபர்களை வாக்களிக்க அனுமதித்ததாக தேர்தல் பார்வையாளரும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து 181வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இதனைப் பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.மகேந்திரன், ஆர்.கே.நகரில் 50க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் தெரிவித்தோம். ஆனால் கண்துடைப்புக்காக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டை மீறி கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதற்கு மிக வெளிப்படையான ஒரு உதாரணம் இது. இதற்காக தேர்தல் ஆணையம் வெட்கப்பட வேண்டும். இதை பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் இதற்கான வருத்தத்தை வெளியிட வேண்டும் என்றும் மகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக தேர்தல் அதிகாரி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறிய அவர், ஆர்.கே.நகரில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாகவும், தலைமைத் தேர்தல் அதிகாரி பற்றியும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்போவதாகவும் சி.மகேந்திரன் தெரிவித்தார். மேலும், கைரேகையை பதிவு செய்து வாக்களிப்பதன் மூலமே முறைகேடுகளை தடுக்க முடியும் என்றும் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications