கூட்டணி இல்லைன்னு அதிமுக சொல்லிவிட்டதே...: கதறியழுத தா. பாண்டியன்
சென்னை: லோக்சபா தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்ததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா. பாண்டியன் விரக்தியின் உச்சத்துக்கு சென்று திருச்சியில் கதறி அழுதது போல் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
திருச்சி காட்டூரில் நேற்று இரவு நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில அளவிலான பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் தா. பாண்டியன் பேசியதாவது:
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஏ.பி. பரதன் ஆகியோரை அழைத்துப் பேசினார். பத்திரிகையாளர்களையும் அழைத்து அந்த அம்மையாரே சொன்னார், "கூட்டணி ஏற்பட்டிருக்கிறது' என்று.
நாங்களா சொன்னோம்?
அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்களையும் அழைத்தார். பத்திரிகையாளர்களையும் அழைத்தார். அவரே சொன்னார் கூட்டணி அமைந்திருக்கிறது என்று..நாங்கள் சொல்லவில்லை.
ஜவ்வு மிட்டாய் மாதிரி..
இப்போது முறிந்ததாக அவரே சொல்லும் வரை நாங்கள் அந்த அணியில் இருக்கிறோம் என்றுதான் அர்த்தம். அணி இருக்கிறது, ஆனால் தொகுதி? ஜவ்வுமிட்டாய் போல இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள். மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடக்கிறது.
கோபமெல்லாம் வரும்..
வெறுமனே உணர்ச்சியோடு மட்டுமே இருந்து விடமுடியாது. சில சமயங்களில் கோபமும் வரும். இறுதி முடிவு எங்கிருந்து வர வேண்டுமோ, அதுவரை அமைதியாக இருப்போம். எடுத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லுவோம். தீர்க்கமான முடிவை எடுப்போம்.
அதிமுக பிறந்த காலத்தில் இருந்து..
அதன்பிறகு, அந்த முடிவின்படி முன்னேறிச் செல்வோம். அப்போது திரும்பிப் பார்க்க மாட்டோம். அதிமுக பிறந்தபோது உடனிருந்தவர்களில் எஞ்சியிருப்பவன் நான்.
அதிமுகவை காப்பாற்றியவர்கள்..
பட்டுக்கோட்டை பாடிய பாடலுக்காக இதுவரை அதிமுகவுடன் உடனிருக்கிறோம். அதிமுக தாக்கப்பட்டபோதெல்லாம் காக்கும் பணியைச் செய்திருக்கிறோம்.
கவுரவம், மரியாதையைவிட மாட்டோம்..
எந்தக் காரணம் கொண்டும் கவுரவம், மரியாதை, உரிமையை இழக்க மாட்டோம்.
இவ்வாறு தா. பாண்டியன் பேசினார்.
எங்களிடம் சொல்லலை
பின்னர் செய்தியாளர்களிடம் விரக்தியோடு தா. பாண்டியன் பேசுகையில், என்னிடமோ, எங்கள் கட்சியினரிடமோ அதிமுக தலைமையிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.
மார்க்சிஸ்ட் கட்சியிடம் சொல்லியிருக்காங்க..
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஏதோ சொல்லியிருக்கிறார்கள். சென்னையில் அவர்களுடன் பேசுவோம். அதன்பிறகு பேச வேண்டிய இடத்தில் பேசுவோம்.
ஜெயலலிதான் அறிவிக்கனும்
கூட்டணியில் இல்லை என்பதை ஜெயலலிதா வாயால் சொல்ல வேண்டும். இத்தனைக் காலம் பொறுமையாக இருக்கிறோம் என்றால், பாரதக் கதையைப் படித்துப் பாருங்கள் என்றார்.