ஜெயலலிதாவுக்கு இருந்த துணிச்சல் தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு இல்லை: தா.பாண்டியன் தாக்கு!
ஜெயலலிதாவுக்கு இருந்த துணிச்சல் தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு இல்லை என தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு இருந்த துணிச்சலில் ஒரு பங்குக்கூட இன்றைய ஆட்சியாளர்களிடம் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு எப்போது வாய்திறக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைச்சட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாட்டிறைச்சி தடைச்சட்டத்தை திரும்பப்பெறக்கோரி அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசு மாட்டிறைச்சிக் குறித்து இதுவரை வாய்திறக்கவில்லை. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாட்டிறைச்சி தடை சட்டத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தமிழக அரசு மத்திய அரசை எதிர்க்க பயப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதாவுக்கு இருந்த துணிச்சலில் ஒரு பங்கு கூட தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இல்லை என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் . இன்றாவது மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு வாய்த்திறக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.