மாணவர்களின் புரட்சி போராட்டத்தில் போலீசார் வன்முறை.. பிப். 7ல் சிபிம் முற்றுகைப் போராட்டம்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் அமைதியாக நடந்த வந்த நிலையில், அதனை வன்முறையாக மாற்றிய போலீசாரின் நடவடிக்கைளை கண்டித்து சிபிஎம் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமலாக்க மத்திய அரசு எதிராக இருந்தது. கர்நாடக அரசு தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விடவில்லை. இதனால் டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நூறாண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு வறட்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் சாகுபடி செய்ய முடியவில்லை. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை விவசாயிகள் தற்கொலை இல்லை. ஆனால் இந்த ஆண்டு விவசாயிகள் மரணம் அதிக அளவில் நடந்துள்ளது. நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டு மாரடைப்பாலும் தற்கொலை செய்து கொண்டும் 150 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். இந்த மோசமான நிலையில், விவசாயிகள் போராட்டம் நடத்திய பின்னரே மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

10 லட்சம் நிவாரணம்
இந்த நிவாரணம் யானை பசிக்கு சோளப் பொறி. அதே போன்று 150 விவசாயிகள் மரணம் அடைந்துள்ள நிலையில் 17 பேருக்கு மட்டுமே நிவாரணம் அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. எனவே, மரணம் அடைந்த விவசாயிகளின் அனைத்து குடும்பங்களுக்கும் 10 லட்சம் கொடுக்க வேண்டும். பாதிப்படைந்த நெல் பயிர் ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு 10 ஆயிரம் அறிவிக்க வேண்டும்.

ஒரு குடம் குடிநீர் ரூ.5
குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் பகுதியில் ஒரு குடம் குடிநீர் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஏரி, குளம், கால்வாய் என அனைத்தும் மராமத்து பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. அதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.

மோசமான பட்ஜெட்
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி என்பது 1 சதவீதம் குறைந்துள்ளது. விவசாயம், சிறு, குறு தொழில்கள், வியாபாரம், முறைசாரா தொழில்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வளர்ச்சியை ஊக்குவிக்கவோ, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கோ பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. இந்த பட்ஜெட் மிக மோசமான பட்ஜெட்.

பணக்காரர்களுக்கான பொருளாதாரம்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கணக்கின் படி கடன் வாங்கி கட்டாத தொகை 8 லட்சம் கோடி. இவ்வளவு பணமும் கார்பரேட் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட கடன். சாதாரண மக்களை ஒருமாதிரியும், கார்பரேட் கம்பனிகளை வேறுமாதிரியும் பார்ப்பதுதான் மத்திய அரசின் பொருளாதார கொள்கையாக இருக்கிறது.

முற்றுகை போராட்டம்
தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கிறது. எனவே, பிப்ரவரி 7ம் தேதி மத்திய மற்றும் மாநில அரசுகளின் அலுவலகங்கள் முன்பு சிபிஎம் சார்பாக மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.

காவல்துறையின் வன்முறை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒருவாரம் அமைதியாக ஜாதி, மதம் கடந்து எழுச்சியாக நடைபெற்றப் போராட்டத்தை தமிழக அரசு வன்முறையாக கலைத்தது. போராட்டக்காரர்களை அடித்து விரட்டிய காவல்துறையினர், குடிசை, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதற்கு காரணமாக விளங்கிய சென்னை, கோவை மாநகர ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிபிஎம் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications