கோயில் கட்ட பூசாரி, தர்ம கத்தா போதுமே.. அரசியல் கட்சி எதுக்கு? சி.பி.எம். கேள்வி
சென்னை: கோயில் கட்டுவதற்கு ஒரு பூசாரி, தர்ம கத்தா போதுமே.. பாரதிய ஜனதா என்ற அரசியல் கட்சி எதற்கு தேவை? என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வட சென்னை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பிரசாரத்தின் போது பேசியதாவது:
வடசென்னை தொகுதியில் ஒரு பெண் வேட்பாளர் கூட வெற்றி பெற்றது இல்லை. வடசென்னை பகுதியில் கொசுதொல்லை, குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவது, கழிப்பிடம் போன்ற பிரச்சனைகள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் மின்வெட்டு நீடிக்கிறது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்யும் திமுகவும், அதிமுகவும், முறையாக தொலைநோக்கு பார்வையோடு திட்டமிடாததாலும், மத்திய அரசு பொறுப்பாக நடந்து கொள்ளாததாலும் மின்வெட்டு பிரச்சனை உள்ளது.
காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது என்று அந்த கட்சி தலைவர்களே கூறி வருகின்றனர். காங்கிரசுக்கு மாறாக பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் மத மோதல்களும், சாதி கலவரங்களும் அதிகரிக்கும்.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறியுள்ளது. கோவில் கட்ட பூசாரி, தர்ம கர்த்தா இருந்தால் போதும். அரசியல் கட்சி தேவையில்லை.