விருதுநகர் அருகே இன்று அதிகாலையில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து.. அடுத்தடுத்து பயங்கரம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தாண்டிபுரத்தில் பட்டாசு குடோனில் இன்று அதிகாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குடோன் முற்றிலும் எரிந்து சேதமானது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று அதிகாலையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. முத்தாண்டியாபுரம் கிராமத்தில் பட்டாசுகள் சேமித்து வைத்திருக்கும் ஒரு குடோனில் இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குடோனில் எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாகப் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பட்டாசு குடோனில் இன்று அதிகாலை யாரும் எதிர்பாராத விதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
இந்த வெடி விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏதுமில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. குடோனில் யார் யார் இருந்தது, எதனால் விபத்து ஏற்பட்டு என்பது தொடர்பாக காவல் துறையினர், வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன. இந்த பட்டாசு ஆலைகளில் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இந்தச் சூழலில் அங்குள்ள பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் கடந்த 26 ஆம் தேதி பெண் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 அறைகள் தரைமட்டமாயின. இந்த வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் 100 சதவீதம் தீக்காயம் அடைந்த பாக்கிய லட்சுமி (55) என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications