ஈரோட்டில் பட்டாசு விபத்து.. மளிகை கடைக்காரர் மகன் உட்பட 3 பேர் பலி
Recommended Video

ஈரோடு: மளிகை கடையில் பட்டாசு இறக்கியபோது ஏற்பட்ட விபத்தில், 3 பேர் கொல்லப்பட்டனர், 9 வீடுகள் சேதமடைந்தன.
ஈரோடு சாஸ்திரி நகர், பகுதியில், வாகனத்தில் இருந்து மளிகை கடைக்கு பட்டாசு இறக்கியுள்ளனர். சேலத்தில் இருந்து குட்டி சரக்கு ஆட்டோ மூலம் பட்டாசு பொருட்கள் ஏற்றி வரப்பட்டிருந்தது.
அவற்றை இறக்கியபோது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், கடை உரிமையாளரின் மகன், கூலித்தொழிலாளி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

அதிர்வு காரணமாக 9 வீடுகள் சேதமடைந்தன. காலை 6 மணியளவில் நடந்த இந்த விபத்தின்போது, சிலிண்டர்கள் வெடிப்பதை போல பயங்கர சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஈரோடு வளையக்கார வீதியைச் சேர்ந்த சுகுமார்தான் மளிகைக் கடை உரிமையாளராகும். தீபாவளி விற்பனைக்காக பட்டாசுகளை வாங்கிய இவர், சாஸ்திரி நகரில் தமக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் பாதுகாப்பாக வைப்பதற்காக, லோடு ஆட்டோவில் கொண்டு சென்றபோது அவருடன் கல்லூரியில் படிக்கும் மகன் கார்த்திக்கும் சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் பட்டாசை இறக்கி வைத்தபோது, வெங்காய வெடிகள் இருந்த பட்டாசு மூட்டை கீழே விழுந்துள்ளது. எனவே அது வெடித்தது. அந்த நெருப்பு பிற பட்டாசுகளுக்கும் பரவியதால் விபத்தின் வீச்சு அதிகமாக இருந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த சுகுமார் தலைமறைவாகிவிட்டார். சம்பவ இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா பார்வையிட்டார். அனுமதியின்றி சுகுமார், பட்டாசு குடோன் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications