ஒன்றுபட்ட போராட்டங்கள்தான் மாற்றங்களை கொண்டு வரும்: சென்னையில் படைப்பாளிகள் அறைகூவல்
தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்றும் ஒன்றுபட்ட போராட்டங்கள்தான் மாற்றங்களை கொண்டு வரும் என்றும் தமிழகத்தின் படைப்பாளிகள் அறைகூவல் விடுத்துள்ளனர்,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து நேற்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ரூ.1 கோடி நிவாரணம் தேவை
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், படுகொலையை நிகழ்த்திய ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாள்ரகள் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மண்ணையும் காற்றையும் மக்களையும் கார்ப்பரேட் தாமிரத்தூசு மாசுவிலிருந்து காத்திட வேண்டும் என்பன போன்ற முழக்கங்களும் இதில் எழுப்பப்பட்டன.
பங்கேற்ற படைப்பாளிகள்
இந்த ஆர்ப்பாட்டத்தில், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, கவிஞர் சல்மா, அஜயன்பாலா., கவிஞர் யுகபாரதி, இயக்குனர்கள் எஸ்.பி. ஜனநாதன், ப.ரஞ்சித், பாலாஜி சக்தவேல், சசி, சீனுராமசாமி, கார்த்திக்சுப்புராஜ், ராம், பாண்டிராஜ், பிரம்மா, ராஜூ முருகன், தாமிரா, மீரா கதிரவன், மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கலையரசன், அசோக் செல்வன், சுந்தராஜன், வழக்கறிஞர் அருள்மொழி, பேரா.ஹாஜாகனி, செயற்பாட்டாளர் ஆளூர் ஷாநவாஸ், ஊடகவியலாளர்கள் அ.குமரேசன், ஆழி. செந்தில்நாதன், கவின்மலர், அருள் எழிலன், அதிஷா, டி.எஸ்.ஆர். சுபாஷ், அதிஷா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
4 கட்சிகளுமே காரணம்
அப்போது பேசிய இவர்களின் ஒட்டுமொத்த கருத்தானது: அவர்களின் ஒட்டுமொத்த கருத்தும், துரத்தி சென்று மக்கள் குறிபார்த்து சுடப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் முழு விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக இந்த நான்கு கட்சிகளுமே ஸ்டெர்லைட் ஆலை ஏற்பட காரணமாக இருந்திருக்கிறார்கள். அப்பாவி மக்கள் மீது படுகொலையையும் நிகழ்த்திவிட்டு அதை நியாயப்படுத்துபவர்கள் தமிழ் விரோதிகள்.
அடிமைகள் நம்மை ஆள்கிறார்கள்
தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து உள்ளது. அடிமைகள் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். சாதி இனம் பார்த்து மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். தமிழ்மொழி மட்டும் பேசுவர்கள் மட்டும் தமிழர்கள் அல்ல. வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும். ஒன்றுபட்ட போராட்டங்கள்தான மாற்றங்களை கொண்டு வரும்.இவ்வாறு அந்த போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் தங்களது கருத்துக்களை பதிய வைத்தனர். முன்னதாக, போராட்ட களத்தில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.