தலைவிரி கோலத்தில் நீட் தேர்வு மாணவிகள்.. கண்கலங்கும் பெற்றோர்கள்
சோதனை என்ற பெயரில் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Recommended Video
சென்னை: ஆவடியில் நீட் தேர்வு எழுதும் மாணவிகளிடம் தலைமுடியை அவிழ்க்க சொல்லுதல் உள்ளிட்ட அதிக நெருக்கடி கொடுப்பதாக பெற்றோர்கள் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஆவடி கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மூன்று மையங்களில் சுமார் 1800 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இது தவிர்த்து கொரட்டூரில் இரண்டு இடங்களிலும்,திருவேற்காட்டில் ஒரு மையத்திலும் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு வரும் மாணவ மாணவியர்களிடம் ஆடைகள் பரிசோதிப்பது, தலைமுடி பின் காட்டுவது, கையில் கயிறு அறுத்து சோதிப்பது போன்ற அதிக நெருக்கடி கொடுப்பதாக பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் மாணவிகள் தலையில் அணிந்து வரும் க்ளிப், பேண்ட் போன்றவற்றிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அணிந்து வரும் மாணவிகள் அதனை அகற்றிய பிறகு தான் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதே போல் ஜலதோஷம் உள்ள நபர்கள் கூட கையில் கர்சீப் கொண்டு செல்ல கூடாது என்றும் தங்கள் அணிந்து இருக்கும் துணியிலேயே துடைத்து கொள்ளவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
சோதனை என்ற பெயரில் ஆடைகளை பரிசோதித்தும் அவர்களின் தலைமுடிகளும் அவிழ்த்து காட்ட சொல்லியும் நெருக்கடி கொடுத்து வரும் சம்பவம் தேர்வு மாணவிகளை விரக்தியின் உச்சக்கட்டத்துக்கு கொண்டே சென்றுள்ளது. மருத்துவராகும் லட்சியத்துடன் பாடுபட்டு இரவும் பகலும் படித்த பெண் இன்று தலைவிரி கோலத்துடன் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு ஆளாக்கிவிட்டன இந்த மத்திய-மாநில அரசுகள்.
இதுபோன்ற கீழ்த்தரமான-கேடுகெட்ட தேர்வு முறை இந்தியாவை தவிர வேறெங்கும் நடக்காது. கடந்த 2 நாட்களாக நெருக்கடிகள், அலைக்கழிப்புகள், அவமானங்கள், அச்சம், பதற்றம், குழப்பம் என பலவகையிலும் இன்னல்கள் மாணவ, மாணவிகள் கழுத்தை இறுக்கி நெருக்கி தள்ளி கொண்டிருக்கின்றன. பணத்தை கொட்டி படிக்க வைத்த தம் செல்ல மகள், இன்று தலைவிரி கோலமாக தேர்வு எழுத செல்வதை கண்கலங்கி பார்த்து வழியனுப்பி வைக்கும் பெற்றோர்களுக்கு இந்த இதயமற்ற அரசுகள் என்ன பதில் சொல்ல போகின்றன?