சசிக்கு 3000 பேர்தான்.. நாங்க ஒன்றரை கோடி பேர்.. தீபாவுக்காக கொந்தளிக்கும் அதிமுக தொண்டர்கள்!
சசிகலா தலைமையை விரும்பாத அதிமுக தொண்டர்கள் தீபாவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். தீபாவின் வீட்டு வாசல் முன் அதிருப்தியாளர்கள் கூடி சசிகலாவிற்கு எதிராக கோஷமிட்டனர்.
சென்னை: ஜெயலலிதா இறந்து 30வது நாளான நேற்று தீபாவின் வீட்டு வாசல் முன் அதிமுக தொண்டர்கள் கூடி சசிகலாவிற்கு எதிராக கோஷமிட்டனர். தீபாவை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தினர்.
ஜெயலலிதா கடந்த மாதம் 5ம் தேதி மறைந்தார். அதன் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக அக்கட்சியின் பொதுக் குழு கூடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. இதற்கு அடித்தள தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த எதிர்ப்பு மேலும் வலுபெற்று, ஜெயலலிதா மறைந்த 30வது நாளான நேற்று, தீபாவின் வீட்டு வாசல் முன்பு அதிமுக அதிருப்தியாளர்கள் ஒன்று கூடினார்கள். அப்போது, தீபாவை அரசியலுக்கு வருமாறும், சசிகலாவை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.

ஜெ. மறைந்த 30வது நாள்
ஜெயலலிதா மறைந்து 30வது நாளான நேற்று காலையில் இருந்தே சசிகலா அதிருப்தியாளர்கள் தி. நகர் சிவஞானம் சாலையில் உள்ள தீபாவின் வீட்டு வாசல் முன் வரத் தொடங்கினார்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டத் தொண்டர்களும் தீபா வீட்டின் முன் குவிந்தனர்.

ஜெயலலிதா போல் வணக்கம்
அதிமுக அதிருப்தி தொண்டர்களை காண்பதற்காக, தீபா குடியிருக்கும் வீட்டின் முதல் மாடியில் துணி ஒன்று திரை போல் கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்திற்கு தீபா அரை மணி நேரத்திற்கு ஒரு முறை விசிட் அடித்து தொண்டர்களை பார்த்து வணக்கம் தெரிவித்தார். பின்னர் இரண்டு கைகளையும் அசைத்து ஆதரவாளர்களுக்கு உற்சாகமூட்டினார்.

சசிகலாவிற்கு எதிர்ப்பு
தீபாவை காண வந்த ஜெயலலிதாவின் விசுவாசிகள், சசிகலாவிற்கு எதிராக கோஷமிட்டனர். ஜெயலலிதா போல் போஸ் கொடுத்துள்ள தீபாவின் படத்தை கையில் ஏந்திய தொண்டர்கள் அதனை தலைக்கு மேலே உயர்த்தி காண்பித்தனர்.

தீபா “அம்மா”
1989ல் ஜெயலலிதா ரசிகர் மன்றத்தை உருவாக்கியவர்கள் நாங்கள். இன்று தீபாவிற்கு உருவாக்கி இருக்கிறோம். பொதுமக்களிடம் சசிகலாவிற்கு ஆதரவே இல்லை. சசிகலாவிற்கு ஒரு ஓட்டும் விழாது. தீபாவிற்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. தீபா தேர்தலில் நின்றால் பணம் செலவு செய்யத் தேவையில்லை. மக்களே ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துவிடுவார்கள் என்று அங்கு கூடியிருந்த தீபா ஆதரவாளர்கள் கூறினார்கள்.

ரத்தத்தின் ரத்தம்
ஜெயலலிதாவின் வழி வந்த தீபா, அதிமுகவின் பொதுச் செயலாளர் பொறுப்பேற்று அனைவரையும் வழி நடத்த வேண்டும். தீபாதான் ஜெயலலிதாவின் ரத்தத்தின் ரத்தம். எனவே, அவர்கள்தான் கட்சிப் பொறுப்பிற்கு வர வேண்டும். ஒன்றரைக் கோடி தொண்டர்கள் தீபாவுடன் இருக்கிறோம் என்று எம்ஜிஆர் சொன்ன ரத்தத்தின் ரத்தமேவிற்கு புதிய அர்த்தத்தை சொன்னார்கள் குழுமி இருந்த தீபா ஆதரவாளர்கள்.

ஆர்.கே.நகரில் தீபா
சசிகலா ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் நின்றால் நிச்சயம் தோற்கடிப்போம். அதே தீபா நின்றால் அவருக்கு எல்லோரும் ஓட்டுப் போடுவார்கள். மக்கள் ஆதரவு தீபாவிற்கு உள்ளது. எனவே தைரியமாக தீபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அதிருப்தியாளர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications