சிஆர்பிஎப் தேர்வு தமிழில் நடத்தப்படாது.. முதல்வரின் கோரிக்கையை உள்துறை அமைச்சகம் நிராகரித்ததாக தகவல்
சென்னை : சிஆர்பிஎஃப் பணிக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பிய நிலையில், "இந்தி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் தேர்வு நடத்தும் திட்டம் இல்லை" என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் மத்திய ரிசர்வ் காவல் படை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. மத்திய ரிசர்வ் காவல் படையின், 9,223 காவலர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
சிஆர்பிஎஃப் பணிக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆங்கிலம், இந்தியில் மட்டுமே கணினி தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு, தேர்வு எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையை பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் சமவாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்,
இந்தத் தேர்வு இந்தி பேசுவோருக்கே சாதகமாக உள்ளது, இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு எதிரானது. இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சிஆர்பிஎஃப்-ல் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இத்தேர்வை நடத்த ஏதுவாக அறிவிக்கையில் மாற்றம் செய்ய சிஆர்பிஎஃப் அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்நிலையில், சிஆர்பிஎஃப் தேர்வு தமிழில் நடத்தப்படாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்ததாக தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. "இந்தி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் தேர்வு நடத்தும் திட்டம் இல்லை" என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications