'தனி ரயில் பெட்டியில்' நகை, பணம் கடத்தல்- சிபிஐயிடம் சிக்கிய ரயில்வே ஐஜி!
ஹவுரா சென்ற ரயிலில் தனியாக ஒரு பெட்டியை இணைத்து அதில் நகை பணம் கடத்திய ரயில்வே போலீஸ் ஐஜியிடன் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை: திருச்சியில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலில் புதிய பெட்டியை இணைத்து நகை பணம் எடுத்துச் சென்ற ரயில் போலீஸ் ஐஜியிடம் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் இருந்து சென்னை வழியாக ஹவுரா செல்லும் ரயிலில் தனிப்பெட்டி இணைக்கப்பட்டு அதில் நகை பணம் கடத்தப்படுவதாக சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் அந்த ரயிலை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அதில் சேர்க்கப்பட்டிருந்த அந்த ஏசி பெட்டியை கழற்றி சேத்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று நிறுத்தி வைத்துள்ளனர். அதிலிருந்த நகைகள் மற்றும் பணக் கட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

விசாரணையில் உயரதிகாரிகள் அவசர காலங்களில் செல்லும் தனி ஏசி பெட்டியில் நகைகள் மற்றும் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டியை ஐசிஎப் இடமிருந்து சிஆர்பிஎப் ஐஜி எஸ்.கே.பாரி பெற்றதும், அதில் அவரே நகை மற்றும் பணத்தை கடத்திச்சென்றதும் தெரியவந்துள்ளது.
தற்போது சிபிஐயிடம் சிக்கியுள்ள ஐஜி எஸ்.கே.பாரி ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரைச் சேர்ந்தவர். நகைகள் மற்றும் பணத்தை கடத்தி தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முயன்றாரா என்று விசாரித்து வரும் அதிகாரிகள் , இதில் மற்ற அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பை சிபிஐ அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.பிடிபட்ட ஐஜி பாரியிடம் சிபிஐ அதிகாரிகள் மட்டுமின்றி வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து தனி ரயில் பெட்டியில் நகை மற்றும் பணத்தை கடத்திச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications