அதிமுக பொதுச்செயலர் யார்? வெல்லப் போது ஓபிஎஸ்? சசிகலா? இன்று பொதுக்குழுவில் க்ளைமாக்ஸ்!
சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அதிமுகவின் புதிய பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
சென்னை: அதிமுகவின் அவசர பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று கூடுகிறது. இக்கூட்டத்தில் அதிமுகவின் புதிய பொதுச்செயலர் யார் என்ற சர்ச்சைக்கு முடிவு கிடைக்கும் என அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ஏற்றார். அதேநேரத்தில் அதிமுகவின் பொதுச்செயலர் யார் என்ற கேள்வி எழுந்தது.
அரசியலில் இதுவரை களமிறங்காத சசிகலாவை அவரது உறவினர்கள் பொதுச்செயலராக மும்முரமாக முயற்சிக்கின்றனர். ஆனால் இதை அதிமுக தொண்டர்கள் கூட ஏற்கவே மறுத்து வருகின்றனர்.
மத்திய அரசு நெருக்கடி
சசிகலா பொதுச்செயலரானால் அடுத்து முதல்வர் பதவியையும் கைப்பற்றிவிடுவார் என மத்திய அரசு கருதுகிறது. சசிகலா வசம் அதிமுகவும், ஆட்சியும் போவதை மத்திய அரசு விரும்பவில்லை.
சசிகலா புஷ்பா வழக்கு
சசிகலா பொதுச்செயலராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார். 2011-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் சசிகலா; 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுக்குள் அவர் மீண்டும் நுழைந்தார்; ஆனால் அதிமுகவில் உறுப்பினரானாரா? என்பது தெரியவில்லை;
சசிக்கு தகுதி இல்லை?
அதிமுக சட்டவிதிகளின்படி 5 ஆண்டுகாலம் கட்சியின் உறுப்பினராக இருந்தால்தான் பொதுச்செயலர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட முடியும்; சசிகலாவுக்கு அந்த தகுதி இல்லை என்பது சசிகலா புஷ்பாவின் வாதம். இதை சுட்டிக்காட்டிதான் மத்திய அரசு, சசிகலா தரப்புக்கு நெருக்கடி கொடுக்கிறதாம்.
அதிமுக பொதுக்குழு
இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்பாடுகளை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
ஓபிஎஸ் பொதுச்செயலர்?
இப்பொதுக்குழுவில் யார் பொதுச்செயலர் என இறுதி முடிவெடுக்கப்பட உள்ளது. அதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைதான் பொதுச்செயலராக்க மத்திய அரசு விரும்புகிறது; ஆனால் அதிமுகவின் சீனியர் நிர்வாகிகளோ, சசிகலாவை பொதுச்செயலராக்க கோரும் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றிவிடலாம் என கருதுகின்றனராம்.
இணை பொதுச்செயலர் சசி?
ஓ.பன்னீர்செல்வம் பொதுச்செயலரானால் சசிகலாவுக்கு இணைபொதுச்செயலர் பதவி கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலாவுக்கு எந்த பதவி கொடுத்தாலும் இன்றே கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவும் எதிர்ப்பு கோஷ்டியும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.