கல்லூரி உதவிப் பேராசியர் பணிக்கான “நெட்” தேர்வு - நடைபெறும் நாள் ஜூன் 28!
சென்னை: கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான நெட் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 28 ஆம் தேதி இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு பொதுவாக முறையே மார்ச், செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும்.
மொத்தம் 84 பாடங்களின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 89 பெரிய நகரங்களில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.
இந்தத் தேர்வை இதுவரை பல்கலைக்கழக மானியக் குழு நடத்தி வந்தது. இப்போது கடந்த 2014 டிசம்பர் மாதத் தேர்வு முதல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இப்போது 2015 ஜூன் மாத தேர்வுக்கான அறிவிப்பை சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் 28 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கு www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன் லைனில் மட்டுமே விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.
விண்ணப்பிக்க மே 15 கடைசி தேதியாகும். இதுபோல, கட்டணத்தைச் செலுத்துவதற்கான வங்கி செலுத்து சீட்டை பதிவிறக்கம் செய்யவும், வங்கிகளில் கட்டணத்தைச் செலுத்தவும் மே 15 கடைசித் தேதியாகும்.
மேலும் விவரங்களுக்கு சி.பி.எஸ்.இ. இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
"நெட்" தேர்வுக் கட்டணத்தை சி.பி.எஸ்.இ. உயர்த்தியுள்ளது. இதுவரை ரூபாய் 500 ஆக இருந்த தேர்வுக் கட்டணம், இப்போது ரூபாய் 600ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் தேர்வுக் கட்டணமாக ரூபாய் 300 செலுத்தினால் போதுமானது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 150ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications