வெள்ளக்காடாகிய கடலூர்: உணவு, குடிநீர் கேட்டு சாலை மறியலில் குதித்த மக்கள்
கடலூர்: மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் சாலை மறியல் செய்து வருகிறார்கள்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த நான்கு நாட்களாக கடலூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. விடாமல் பெய்த மழையால் கடலூர் மாவட்டம் வெள்ளக்காடாகிவிட்டது.
இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். கனமழைக்கு கடலூர் மாவட்டத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர்.
கனமழையால் வாழை, கரும்பு, நெல் பயிற்கள் சேதம் அடைந்துள்ளன. 75 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் இல்லாததாலும், உணவு, குடிநீர் தட்டுப்பாடாக இருப்பதாலும் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் குடிநீர், உணவு கேட்டு மக்கள் பல இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது குறித்து மக்கள் கூறுகையில்,
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யவில்லை. பேரிடர் மேலாண்மை குழுவின் பணிகள் வெறும் கண்துடைப்பு தான். உள்ளாட்சி பிரதிநிதிகளோ மக்களுக்கு நிவாரணப் பணியை செய்யாமல் அதிகாரிகள் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.