வடக்கே நகர்ந்த மாதி புயல்: சென்னைக்கு வெறும் குளிர்தான்!
சென்னை: மாதி புயல் வடக்கு திசை நோக்கி நகர்ந்து விட்டதால் தமிழகத்தில் படிப்படியாக மழை குறைந்துவிடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை மக்கள் வெறும் குளிரை மட்டுமே அனுபவிக்க வேண்டியிருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இலங்கை அருகே தென் மேற்கு வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி சனிக்கிழமையன்று புயலாக மாறியது. இதற்கு ‘மாதி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த மாதி புயல் இன்று காலையில் அதி தீவிர புயலாக மாறியது. சென்னைக்கு தென் கிழக்கே 490 கி. மீட்டர் தொலைவிலும் திரிகோணமலைக்கு 510 கி.மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
தற்போது வடக்கு நோக்கி மாதி புயல் மெல்ல நகர்ந்து செல்வதன் காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, அந்தமான் நிக்கோபர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை இருக்கும்.
மாதி புயலினால் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாதி புயல் 10ம் தேதி வரை அதி தீவிர புயலாகவும், 11ம் தேதி தீவிர புயலாகவும், 12ம் தேதி சாதாரண புயலாகவும் வலு குறையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னையில் குளிர்தான்
சென்னையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 15.6 மி.மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 10.5 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்படும். தரைக்காற்று வீசுவதால் ‘குளிர்' அதிகம் காணப்படும்.












Click it and Unblock the Notifications